பிரிட்டனில் படிக்க வேண்டுமா? வேலை பார்ப்பது அவசியம்
லண்டன்: பிரிட்டனில் படிக்கச் செல்லும் வெளிநாட்டினர், பகுதி நேரமாக ஏதாவது வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் விலைவாசி கடுமையாக அதிகரித்து வருவதால், அங்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்கள், பணப் பற்றாக்குறையால் பெரிதும் சிரமமடைய நேரிடுகிறது. இதனால், அவர்கள் ஏதாவது பகுதி நேர பணியில் சேர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கும் இதே நிலை தான். வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களால், பிரிட்டனின் விலைவாசி உயர்வை தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 10 மாணவர்களில் நான்கு பேர், பகுதி நேர வேலை பார்ப்பது தெரியவந்துள்ளது. வாழ்க்கை நடத்துவதற்கான செலவும், கல்விக் கட்டணமும் தொடர்ந்து அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.