நூலகர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு
இதேபோல், நூலகத் துறை ஊழியர்களும், ஊதிய உயர்வில், விடுபட்டுள்ளதாக, புகார் கிளம்பியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட ஆசிரியர் சங்கங்கள், போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. ஊதிய குறைதீர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து, சமீபத்தில், அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வை, தமிழக அரசு வெளியிட்டது. இதில், சில தரப்பினர், அதிருப்தி அடைந்துள்ளனர். "இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு வழங்கவில்லை" என, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, குற்றம் சாட்டியுள்ளது. இந்த பிரச்னை குறித்து விவாதித்து, அடுத்தகட்ட முடிவை எடுப்பதற்காக, சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம், வரும், 4ம் தேதி, நாமக்கலில் நடக்கும் என, சங்க பொதுச்செயலர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். இதில், அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட முடிவு எடுக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இதேபோல், நூலகத் துறை பணியாளர்களும், அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை பணியாளர் கழகம் சி மற்றும் டி பிரிவு தலைவர் ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கை: நூலக பணியாளர்களின் தர ஊதிய வித்தியாசத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என பலமுறை, தமிழக அரசிடமும், ஒரு நபர் குழுவிடமும் வலியுறுத்தினோம். ஆனாலும், நூலகர்களுக்கு, தர ஊதியம், உயர்த்தி வழங்கவில்லை. நான்காவது மற்றும் ஐந்தாவது ஊதிய குழுவில், உதவியாளர் பணிக்கான ஊதியமும், இரண்டாம் நிலை, இருப்பு சரிபார்ப்பு நூலக பணியாளர்களுக்கான ஊதியமும், ஒரே நிலையில் இருந்தது. இளநிலை உதவியாளர் மற்றும் மூன்றாம் நிலை நூலகப் பணியாளர்களும், ஒரே ஊதியம் பெற்று வந்தனர். தற்போது, இவர்களுக்கிடையே, தர ஊதியத்தில், முரண்பாடு நிலவுகிறது. தர ஊதிய வித்தியாசத்தை போக்கிட, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், சாதகமான உத்தரவு கிடைக்கவில்லை எனில், இவர்களும், போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டுள்ளனர்.