ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்
புதுச்சேரி; புதுச்சேரியில் மூன்று பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப்களை, முதல்வர் வழங்கினார். புதுச்சேரியில் பிளஸ் 2 முடித்த, 11 ஆயிரத்து 748 மாணவ மாணவியருக்கு ரூ. 12 கோடியில் லேப்டாப் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. கடந்த மாதம் 22ம் தேதி, கம்பன் கலையரங்கில் நடந்த விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி லேப்-டாப் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். நேற்று கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, முத்திரைப் பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல் நிலைப் பள்ளி, இந்திரா நகர் இந்திராகாந்தி அரசு மேல் நிலைப் பள்ளிகளை சேர்ந்த ஆயிரம் மாணவ, மாணவியருக்கு லேப் டாப்கள் நேற்று வழங்கப்பட்டன. அந்தந்த பள்ளிகளில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி வழங்கினார். கல்வித்துறை அமைச்சர் தியாகராஜன், செயலர் ராகேஷ் சந்திரா, இயக்குனர் குமார், இணை இயக்குனர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கதிர்காமம் பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: புதுச்சேரியில் ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை, ஏழை மாணவர்கள் இலவசமாக படிக்க அனைத்து வசதிகளையும் அரசு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. நீங்கள் படிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொள்ள வேண்டும். புதுச்சேரியை சேர்ந்த நிறைய மாணவ மாணவியர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற வேண்டும். அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிளஸ் 1 படிக்கும் போதே லேப்டாப் வழங்கினால், பயன் இருக்கும் என்பதால், அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் லேப்-டாப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் ரங்கசாமி பேசினார்.