உள்ளூர் செய்திகள்

கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர் நியமன எதிர்பார்ப்பு

நாடு முழுவதும் அமைந்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளின் செயல்பாடுகளை மத்திய கல்வி அமைச்சகம் மதிப்பீடு செய்து ஆண்டுதோறும் தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான தர வரிசை பட்டியலில் ஜிப்மர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், மாகி மகாத்மா காந்தி கல்லுாரி ஆகிய அரசு கல்லுாரிகள் மட்டுமே புதுச்சேரியில் சாதித்துள்ளன.பக்கத்து மாநிலமான தமிழகத்தில் 35 கலைக் கல்லுாரிகள் தர வரிசை பட்டியலில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளன. சென்னை மாநிலக் கல்லுாரி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. அதேசமயம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு கலைக் கல்லுாரிகள் தரவரிசை பட்டியலில் பின்தங்கி உள்ளன.இதுபோன்ற சூழ்நிலையில் புதுச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், அரசு சொசைட்டியின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் பெரும்பாலானவற்றில் நிரந்தர முதல்வர் இல்லாத தகவல் வெளியாகி உள்ளது. பெரும்பாலான கல்லுாரிகளில் முதல்வர் பதவி பொறுப்பு அடிப்படையில் கவனிக்கப்படுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை பொறுத்தவரை புதுச்சேரியில் 3, காரைக்காலில் 2, ஏனாம் பகுதிகளில் தலா ஒன்று என மொத்தம் 7 கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒரு கல்லுாரியில் மட்டுமே நிரந்தர முதல்வர் உள்ளார். மற்ற 6 கல்லுாரிகளை பொறுப்பு முதல்வரே கவனித்து வருகின்றனர். அசோசியேட் பேராசிரியர் என அழைக்கப்படும் இணை பேராசிரியர்களுக்கே கல்லுாரி முதல்வர் பொறுப்பு வழங்கப்படும். ஆனால் 3 கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்கள் முதல்வர் பொறுப்பை கவனித்து வருகின்றனர்.சொசைட்டியின் கீழ் 4 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கல்லுாரிக்கு மட்டுமே நிரந்தர முதல்வர் உள்ளார். மற்ற 3 கல்லுாரிகளிலும் உதவி பேராசிரியர்களே முதல்வர் பொறுப்பை கவனித்து வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு வரை அரசு கல்லுாரிகளில் அடாக் அடிப்படையில் முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர். பின் கல்லுாரி முதல்வர் பதவிக்கான நியமன விதிகள் திருத்தம் தொடர்பான கோப்பு மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டது. இந்த கோப்பு 6 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனியர் பேராசிரியர்கள் பலர் பதவி உயர்வின்றி ஓய்வு பெறும் அவலம் தொடர் கதையாக உள்ளது. எனவே அரசு மற்றும் சொசைட்டி கல்லுாரிகளுக்கு நிரந்தர முதல்வரை நியமிப்பதற்கும் கல்லுாரிகளை மேம்படுத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்