டைம் மிஷின்கள் புத்தகங்கள் புத்தகத்திருவிழாவில் வாங்கலாம்
மதுரை: மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு எது என்று கேட்ட போது, புத்தகங்கள் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். &'ஒரு நுாலகம் திறக்கப்படும் போது 100 சிறைகள் மூடப்படும் என்றார் விவேகானந்தர்.புத்தகங்களால் மட்டுமே சுயமாக சிந்திக்கின்ற, முடிவெடுக்கின்ற தலைமுறையை உருவாக்க முடியும். சிரிப்பதற்கு, அழுவதற்கு, வசீகரிக்க, உணர்ச்சி வசப்படவைக்க காதலால் மட்டுமல்ல புத்தகங்களாலும் முடியும்.ஒரு டைம் மிஷினைப் போல புத்தகமும் அது எழுதப்பட்ட காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும். அந்த டைம் மிஷின்களில் அனைவரும் பயணிக்கும் ஏற்பாடாக மதுரை தமுக்கம் மைதானத்தில் அக்.,22 வரை தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை புத்தகத் திருவிழா நடக்கிறது. இலக்கியம், வரலாறு, ஆன்மிகம், அரசியல், மருத்துவம், சமையல், குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்கள், போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்களின் சங்கமமாக திகழ்கிறது.இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீத தள்ளுபடி உண்டு. அனுமதி இலவசம். சிறுவர்களுக்கான சிறப்பு அரங்கில் பயிலரங்கம், கதை சொல்லும் நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. மாலை 4:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் பேசுகின்றனர்.பபாசி, மாவட்ட நிர்வாகம், பொது நுாலகம் இயக்கம் இணைந்து ஏற்பாடுகளை செய்கிறது.