உணவுத் தட்டுப்பாடற்ற உலகுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோம்
கோவை: கோவை, வேளாண் பல்கலையில், விதை மையம், பயிர்ப்பாதுகாப்பு மைய இயக்குனரகம் மற்றும் சாஸ்திரி இந்தோ - கனடியன் நிறுவனம் சார்பில், உணவுத் தட்டுப்பாடற்ற உலகை உருவாக்கும் சக்தி கொண்ட விதை மற்றும் பயிர் நலப் புதுமைகளைக் கண்டறிதல் குறித்த சர்வதேச மாநாடு நடந்ததுஇரண்டு நாள் மாநாட்டின் துவக்க நிகழ்வில் பேசிய விதை மைய இயக்குனர் உமாராணி, வரும் 2050ல் உலக மக்கள் தொகை, 970 கோடியை எட்டும். எனவே, உணவுத் தட்டுப்பாடற்ற உலகை உருவாக்க, வேளாண் துறையில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உற்பத்தியைப் பெருக்குவது அவசியம். இத்தருணத்தில் விதைகள் குறித்த சர்வதேச மாநாடு மிக அத்தியாவசியமானது, என்றார்.சர்வதேச மாநாட்டில், லக்னோ கரும்பு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் விஸ்வநாதன், உகாண்டா சர்வதேச உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி சீனிவாசலு ராஜேந்திரன், கனடா கேப் பிரெட்டன் பல்கலை வேதியியல் பேராசிரியர் ஆலன் பிரிட்டன், பல்கலை தாவர பாதுகாப்பு ஆய்வு மைய இயக்குநர் சாந்தி உட்பட உலகம் முழுதும் இருந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தனர்.