உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் காலாண்டு தேர்வு நாளை துவக்கம்

பொள்ளாச்சி: காலாண்டு தேர்வு நாளை துவங்க உள்ள நிலையில், பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான வினாத்தாள்கள் பெறுவதற்கு, இரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.பள்ளிக் கல்வித் துறையில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு, நாளை துவங்கி வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும், அந்தந்த நாட்களுக்கு உரிய வினாத்தாள்களை, காலை, 8:00 முதல் 8:30 மணிக்குள், ஒதுக்கப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதிளுக்கு, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வால்பாறையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில், வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 6 முதல் 10ம் வகுப்புக்கு, வரும் 15ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கு நாளை (10ம் தேதி) முதல் 25ம் தேதி வரையும் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 6 முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கான வினத்தாள், அந்தந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து, தேர்வு நடக்கும் நாட்களில் வாங்கிச் செல்ல வேண்டும்.அதன்படி, பள்ளித் தலைமையாசிரியர்கள், பொறுப்பான நபரை தகுந்த அதிகார அளிப்புக் கடிதத்துடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்துக்கு சென்று வினாத்தாள் பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்வு அறையில், 10 நிமிடத்திற்கு முன்னதாக மட்டுமே வினாத்தாள் கட்டுகளைப் பிரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்