நாஸ்காம் புதிய தலைவர் ஸ்ரீகாந்த் வேலமகன்னி
மும்பை: மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமின் புதிய தலைவராக ஸ்ரீகாந்த் வேலமகன்னி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 'பிராக்டல்' எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் இணை நிறுவனர்.நாஸ்காமின் துணைத்தலைவராகவும் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் ஆவார். நாஸ்காமின் தற்போதைய தலைவரும், எஸ்.ஏ.பி., லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சிந்து கங்காதரனின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதை அடுத்து புதிய தலைவராக ஸ்ரீகாந்த் பதவி ஏற்க உள்ளார்.மேலும், கே.பி.ஐ.டி., நிறுவனத்தின் சி.இ.ஓ., கிஷோர் பாட்டீல், நாஸ்காமின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'ஐ.ஐ.டி., டில்லி மற்றும் ஐ.ஐ.எம்., ஆமதாபாத் கல்வி நிறுவனங்களின் பட்டதாரியான ஸ்ரீகாந்த், நாட்டில் ஏ.ஐ., தொழில் நுட்பத்தை வளர்க்கவும், அது தொடர்பான தேசிய கொள்கைகளை வகுக்கவும் செயல்பட்டு வருபவர்.அரசுக்கு இது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருபவர் என்று நாஸ்காம் கூறியுள்ளது.