அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா
புதுச்சேரி: புதுச்சேரி சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளியின் துணை முதல்வர் ராஜவேலு சுகந்தி தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற முதுநிலை கணக்கு அதிகாரி சிவராமச்சந்திரன் பங்கேற்று, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வாழ்த்தி பேசினார். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் பாரதிதாசன், விரிவுரையாளர் மேரி தனவதி ஆகியோர் செய்திருந்தனர். விரிவுரையாளர் சில்வியா ஜோஸ்பின் மேரி தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.