காலை உணவு திட்டத்தில் சிறுதானிய உணவு?
சென்னை: முதல்வரின் காலை உணவு திட்டத்தில், தற்போது வழங்கப்படும் உணவு வகைகளுடன், திணை உள்ளிட்ட சிறுதானியம் சார்ந்த உணவுகளை வழங்க, அரசு ஆலோசித்து வருகிறது.சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால், சமூக நலத்துறைக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்கள் தொடர்பான திட்டங்களின் செயல்பாடு குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில், "காலை உணவு திட்டத்தில் வழங்கும் உணவு வகைகளை, குழந்தைகளுக்கு பிடித்ததாக மாற்ற முயற்சிக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தரமாக, ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.அரிசி, கொண்டைக்கடலை போன்றவற்றை, நன்கு வேகவைத்து வழங்க வேண்டும். முதியோர் இல்லங்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து, உணவுப் பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும்.காலை உணவு திட்டத்தில், தற்போது வழங்கப்படும் உணவு வகைகளுடன், திணை உள்ளிட்ட சிறுதானியம் சார்ந்த உணவு வகைகளை சேர்க்க வேண்டும்" என, ஆலோசிக்கப்பட்டது.