உள்ளூர் செய்திகள்

ஒருமை பல்கலைக்கழக போராட்டம் தற்காலிக நிறுத்தம்

ஒருமை பல்கலைக்கழக விஷயத்தில், ஆசிரியர் மற்றும் மாணவர்களை பாதிக்கும் எந்த முடிவையும் தமிழக அரசு எடுக்காது என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார். கோவையிலுள்ள பி.எஸ்.ஜி. குரூப் கல்லூரிகள் மற்றும் மதுரையிலுள்ள தியாகராஜா குரூப் கல்லூரிகள் போன்ற ஒரு சில கல்லூரிகளை ஒருமை பல்கலைக்கழகங்களாக மாற்றுவது சம்பந்தமாக கடந்த 2008 ஆம் ஆண்டு, சட்ட மன்றத்தில் இரண்டு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது அம்மசோதாக்கள் ஆளும்கட்சி தவிர, அனைத்து எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்தன. எனவே இந்த மசோதாக்கள் சம்பந்தமாக விவாதித்து முடிவெடுக்கும் பொறுப்பு சபையின் தேர்வு கமிட்டியிடம் விடப்பட்டது. அரசு கொண்டுவந்த இந்த மசோதாக்களினால் தங்களின் நலன் பாதிக்கப்படும் என்று உணர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். தனியார் கல்வி குழுமங்களை ஒருமைப் பல்கலையாக மாற்றுவதால், சமூகத்தின் அடித்தட்டு மாணவர்கள் பிற்காலத்தில் உயர்கல்வி பெறுவது மிகவும் சிக்கலாகிவிடும். மேலும் உயர்கல்வி நிறுவனங்கள் ஒரு பொது சொத்து என்ற நிலையும் மாறிவிடும் என்பன போன்ற காரணங்களை முன்னிறுத்தி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் டிசம்பர் 15 முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்திருந்தனர். இந்நிலையில் அம்மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்காக, சட்டசபை தேர்வுக் கமிட்டியின் மறுகூட்டம், டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனை முன்னிட்டே, ஆசிரியர் சங்கத்தினர் டிசம்பர் 15 முதல் போராட்டத்தை அறிவித்திருந்தனர். ஆனால் முதலமைச்சர் கருணாநிதி, "மழை காரணமாக தேர்வு கமிட்டியின் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களும், மாணவர்களும் எதுவும் பாதகமான முடிவு வந்துவிடுமோ என்று பயப்பட தேவையில்லை. ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் எந்த முடிவையும் இந்த அரசு மேற்கொள்ளாது. எனவே தங்களின் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் தொடர வேண்டியதில்லை" என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, ஆசிரியர்களின் போராட்ட திட்டங்கள் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்