அரசு பள்ளிகளில் திறனாய்வு தேர்வு 5,052 மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி: அரசு பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ - மாணவியருக்கு, மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவியருக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 12,000 ரூபாய் உதவித் தொகையாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்நிலையில் உயர்கல்வி படிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 2023- 24 நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.இத்தேர்விற்கு மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த திறனாய்வு தேர்வு தமிழகம் முழுதும் நேற்று நடந்தது. திருத்தணி கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.கே.பேட்டை அரசு பெண்கள், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த திறனாய்வு தேர்வை திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி நேரில் வந்து ஆய்வு செய்தார்.பின் முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டம் முழுதும் 19 மையங்களில் திறனாய்வு தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கு மொத்தம், 5,479 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 5,052 மாணவர்கள் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 1,000 மாணவர்கள் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டை பின்பற்றி, 500 மாணவர் மற்றும் 500 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்ொகையாக ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள் 10,000 ரூபாய் இளநிலைபட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.