திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரியில் ரூ.90 கோடியில் கேன்சர் சிகிச்சை மையம்
உடுமலை: அரசின் நமக்கு நாமே திட்டத்தில், மக்கள் பங்களிப்புடன், 90 கோடி ரூபாய் செலவில் கேன்சர் சிகிச்சை மையம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட இருக்கிறது என டீன் முருகேசன் கூறினார்.திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நமக்கு நாமே&' திட்டத்தில், கேன்சர் சிகிச்சை மையத்திற்கான பூமி பூஜை நடந்தது.அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் முருகேசன் கூறுகையில், மாநிலத்தின் பல இடங்களில் கேன்சர் சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. அரசின் நமக்கு நாமே திட்டத்தில், மக்கள் பங்களிப்புடன், 90 கோடி ரூபாய் செலவில் உருவாகும், சிகிச்சை மையம் இதுதான்; அதுவும் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்கப்பட இருக்கிறது. இச்சிகிச்சை மையம் வாயிலாக, உயிர் காக்கும் உயர் சிகிச்சை வழங்க முடியும் என்றார்.திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கேன்சர் சிகிச்சை வழங்கி வரும் டாக்டர் சுரேஷ்குமார் கூறியதாவது:திருப்பூரில், உள்ளூர் மட்டுமின்றி, பிற மாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். பான்பராக், குட்கா, புகையிலை பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. அதேபோல், உணவு பழக்க வழக்கங்களும் மாறுபடுகின்றன.புரதச்சத்து குறைவாக உள்ள உணவுகள் உட்கொள்வது போன்றவையும் கேன்சர் ஏற்பட காரணமாக இருக்கிறது என்பதை, அறிய முடிகிறது. மார்பக புற்றுநோய், கர்ப்பபை புற்று நோயால் பெண்கள் பலர் பாதிக்கின்றனர்.பரம்பரை நோய் என்ற காரணம் கூறி, சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை மிக சொற்பம். புற்றுநோய் வர காரணமான பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். உணவு பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வும் வழங்கி வருகிறோம். தற்போது, 150 கேன்சர் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.