உள்ளூர் செய்திகள்

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்திற்கு அழைப்பு

வனத்துக்குள் திருப்பூர் என்ற பசுமை வளர்க்கும் திட்டத்தால் திருப்பூர் மாவட்டத்தில் 250க்கும் அதிகமான பல்லுயிர் சுழற்சி மண்டலங்களும், குறுங்காடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. திறம்வாய்ந்த களப்பணியாளர்கள், அறம் தவறாத வழிகாட்டிகள், நேர்த்தியான திட்டமிடல் என்று சிறப்பாக இயங்குகிறது இத்திட்டம். தற்போது வனத்துக்குள் திருப்பூர்-9 திட்டம், இரண்டு லட்சம் மரக்கன்றுகள் இலக்குடன் துவங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பள்ளி, கல்லுாரி மற்றும் தொழிற்சாலை வளாகத்தில், குறைந்தது 50 மரக்கன்றுகளாவது நட்டு வளர்க்க ஊக்குவிக்கப்படும். மரக்கன்று நடும் நிகழ்ச்சியை, தினமலர் நாளிதழில், படத்துடன் செய்தியாக வெளியிட்டு பெருமை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை வளர்க்கவும், தன்னார்வலர்களை ஊக்குவிக்கும் வகையிலும், இத்தகைய புதிய முயற்சி முன்னெடுக்கப்படுவதாக, வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குனர் சிவராம் கூறியதாவது:வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் எட்டு ஆண்டுகளில் 15.85 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறோம். இரண்டு லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் இலக்குடன் ஒன்பதாவது திட்டம் துவங்கியுள்ளது. ஒன்பதாம் ஆண்டு திட்டத்தில், வழக்கம் போல், விவசாய நிலம், தொழிற்சாலை நிலம், கோவில் நிலங்களில் மரக்கன்றுகள் நடப்படும். அத்துடன், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலை வளாகத்திலும் மரக்கன்று நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம். தங்கள் வளாகத்தில், மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்பும் பள்ளி, கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகள், வனத்துக்குள் திருப்பூர் திட்டக்குழுவை அணுகலாம். பாரம்பரியமாக வளர்க்கப்படும், அரியவகை நாட்டு மரக்கன்றுகள் நட்டு வளர்க்க வழிகாட்டுதல் வழங்கப்படும். மரக்கன்று நட்டு வளர்க்க விரும்புவோர் 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்