உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

பெ.நா.பாளையம்: வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் அறிவித்துள்ளது.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம், 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 300 ரூபாயும், பிளஸ், 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 400 ரூபாயும், பட்டதாரி, முதுநிலை பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 600 ரூபாய் வங்கி கணக்கில், ஒவ்வொரு காலாண்டும் செலுத்தப்பட்டு வருகிறது. டிச., 31ம் தேதி உடன் முடிவடையும் காலாண்டுக்கு புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த உதவித் தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். இந்த ஆண்டு டிச., 31ஆம் தேதி அன்று ஆதிதிராவிடர், பழங்குடியினர், 45 வயதுக்கு மிகாமல், மற்றவர்கள், 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம், 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மாற்று திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே, 15 ஆண்டுகள் வசிப்பவராகவும், முற்றிலும் வேலை இல்லாதவராகவும் இருக்க வேண்டும். கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ, மாணவியராக இருக்கக்கூடாது.ஆனால், தொலைதூர கல்வி, அஞ்சல் வழி கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்க தேவையில்லை.3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த உதவி தொகை பெறுவதற்கு, தகுதியுடைய நபர்கள், tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து, வருவாய் ஆய்வாளரிடம் கையொப்பம் பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்