பதப்படுத்தும் மையங்கள் நடத்த விண்ணப்பிக்கலாம்
கடலுார்: காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு பொருட்கள் பதப்படுத்தும் மையங்களை மாத வாடகையில் நடத்த விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து கடலுார் விற்பனைக்குழு செயலாளர் விஜயா, கடலுார் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூங்கோதை ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அரசு வேளாண விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம், வினியோக தொடர் மேலாண்மை திட்டத்தில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடியில் பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட உணவு வகைகளை பதப்படுத்தும் முதன்மை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.7 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இம்மையங்களை மாத வாடகை அடிப்படையில் நடத்த விரும்புவோர், வரும் 4ம் தேதி மாலை 3:00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.அன்று மாலை 3:30 மணியளவில் மாவட்ட தொழில் நுட்ப குழுவினர் முன்னிலையில், ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்படும்.எனவே பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி முதன்மை பதப்படுத்தும் மையங்களில் பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் இதர உணவு வகைகள் உள்ளிட்டவற்றை பதப்படுத்தும் உணவுத்தொழில் நிறுவனங்கள் அமைக்க ஆர்வமுள்ள விவசாயிகள், உணவுத்தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்டோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.