வருகைப்பதிவில் முறைகேடு கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை
சென்னை: கல்லூரிகளில் வருகைப் பதிவை போலியாக பதிவு செய்யும் பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரித்துள்ளது.அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:சில மருத்துவக் கல்லுாரிகளில், பேராசிரியர்கள், தங்களது வருகைப் பதிவுகளை போலியாக பதிவு செய்வது ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த முறைகேட்டை ஆணையம் தீவிரமாக கண்காணிக்கத் துவங்கியுள்ளது.எனவே, அனைத்து பேராசிரியர்களும், தங்களது வருகைப் பதிவை, கல்லுாரிகளில் வைக்கப்பட்டுள்ள ஆதாருடன் இணைந்த, பயோ - மெட்ரிக் வாயிலாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வருகைப் பதிவில் ஆள்மாறாட்டம் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.