சமூக அறிவியல்; சென்டம் குறையும்
திருப்பூர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேற்று சமூக அறிவியல் தேர்வு நடந்தது. மாவட்டத்தில் 29 ஆயிரத்து மூன்று பேர் தேர்வெழுதினர்; 415 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. தனித்தேர்வர்கள், 775 பேர் தேர்வெழுதினர்; 64 பேர் பங்கேற்கவில்லை.தேர்வெழுதிய மாணவியர் கூறியதாவது:துளசி: ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தன. இரண்டு மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் புதிதாக இருந்தன. 'மேப்' பகுதியில் கேள்விகள் பரவாயில்லை. முழு மதிப்பெண் பெறும் அளவில் இல்லாமல், 90க்கும் மேல் மதிப்பெண் பெற்று விடும் வகையில் வினாத்தாள் இருந்தது.ருமணா: இரண்டு மதிப்பெண் கட்டாய வினா மட்டும் எதிர்பாராதது. மற்ற கேள்விகள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு மதிப்பெண், வரை பட பகுதி வினா எளிதில் விடை எழுதும் வகையில் இருந்ததால், நல்ல மதிப்பெண் பெற முடியும்.சமூக அறிவியல் ஆசிரியர்கள் கூறுகையில், “இரண்டு மதிப்பெண்ணில் கட்டாய வினா பாடங்களுக்குள் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதுவரை கேட்கப்படாத வினா என்பதால், மெல்ல கற்கும் மாணவர்கள் தடுமாறியிருப்பர். வழக்கமாக மேப் பகுதி எளிதாக இருக்கும். இம்முறை மேப் பகுதியிலும் புதுகேள்விகள் என்பதால், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் குறைய வாய்ப்புகள் உள்ளது. ஆனால், தேர்ச்சி சதவீதம் பாதிக்காது,” என்றனர்.வரும், 6ம் தேதி விருப்பமொழி பாடத்துடன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவடைகிறது.