உள்ளூர் செய்திகள்

திறன் வளர்ப்பு விருப்பமல்ல; கட்டாயம்

மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பு பயிலும் காலத்திலேயே பெற்றுக்கொள்ளும் திறன்களும், கல்வியுமே தற்போது மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மூன்று அல்லது நான்கு ஆண்டுகால பட்டப்படிப்பை முடித்தபிறகு, குறிப்பிட்ட ஒரு துறைக்குத் தேவையான திறன்களை கற்றுத் தேர்ந்த காலம் மலையேறிவிட்டது. மாணவர்கள் தங்கள் கல்வி பயிலும் காலத்திலேயே, துறைசார்ந்த முழுமையான திறன்களையும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டியது கட்டாயம்.இன்றைய நவீன உலகில், கல்வி நிறுவனங்களும் தொழில்துறையினரும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்துவிட்டன. இனிவரும் காலங்களில் கல்வி நிறுவனமோ, தொழில்துறையோ தனித்து இயங்கி நிலைத்திருக்க இயலாது. தொழில்துறையினரும், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளேயே இயங்கும்போது தான், மாணவர்களுக்குத் தேவையான தொழில்சார் அனுபவத்தை படிப்பின்போதே முன்கூட்டியே வழங்க முடியும். கல்வி நிறுவனம் என்பது 'கற்றல்' மட்டும் நிகழும் இடமாக இல்லாமல், 'புதிய படைப்புகள்' அதிகளவில் நிகழும் இடமாக உருவெடுக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்கள் 'கற்பித்தல் மையங்கள்' என்ற நிலையிலிருந்து, 'கற்றல் அனுபவ மையங்கள்' என்ற புதிய வடிவமாக உருவெடுக்க வேண்டும். இது ஏறக்குறைய அனைத்து நாடுகளிலும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் தற்போது நடைமுறையில் உள்ளது.பெரும்பாலான தொழில்துறைகளில் இப்போது, இணைத்து உடனே பயன்படுத்தும் 'பிளக் அண்டு பிளே' (Plug-and-Play) போன்ற எளிய வழிமுறைகளை அதிகளவில் விரும்பும் சூழலுக்கு ஏற்ப நம்மை நாம் மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், ஏ.ஐ., உட்பட எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் நமக்கு உதவ வேண்டுமே தவிர, நிலைமை தலைகீழாக மாறிவிடக்கூடாது. நாம் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பது தவறல்ல; ஆனால், அதுவே நம்மை ஆட்டிப்படைக்கும் அளவிற்கு நாம் அதை முழுமையாகச் சார்ந்திருக்கக் கூடாது.நாம் தான் தொழில்நுட்பத்தை ஆள வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடம் இருக்குமேயானால், எந்தவொரு தொழில்நுட்பமும் நமக்குத் தீங்கு விளைவிக்க முடியாது; எந்தவொரு தொழில்நுட்பமும் மனிதர்களாகிய நம்முடைய வேலைவாய்ப்புகளையோ அல்லது பிற உரிமைகளையோ பறித்துக்கொள்ள முடியாது.துறை சார்ந்த சிறப்புத் திறன்களை பெறும் மாணவர்கள் மட்டுமே நிறுவனங்களில் பணியமர்த்தப்படுவதால், திறன்களைத் தொடர்ந்து வளர்த்துக்கொள்வது என்பது இனிமேல் ஒரு விருப்பத் தேர்வாக இருக்காது; அது ஒரு கட்டாயத் தேவையாகவே இருக்கும்.- டாக்டர் ஆர்.தேவி பிரியா, முதல்வர், கே.பி.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ங் அண்டு டெக்னாலஜி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்