நகராட்சிப் பள்ளி தரம் உயர்த்தப்படுமா?
திருமுருகன்பூண்டி: திருமுருகன்பூண்டி நகராட்சி எல்லைக்குள் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லை. இதனால் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவ, மாணவியர் மேல்நிலைத் படிப்பிற்காக அவிநாசி, பெரியாயிபாளையம், வேலம்பாளையம் என 5 முதல் 10 கி.மீ., துாரம் தினமும் பயணம் செய்ய வேண்டியுள்ளது.நகராட்சி கவுன்சிலர் சுப்ரமணியம் கூறுகையில், ஏழை மாணவர்களுக்கு உள்ளூரிலேயே உயர்கல்வி கிடைக்க ஏதுவாக, தற்போது செயல்பட்டு வரும் ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். இது தொடர்பாக, நகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி கல்வித்துறைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.