நெல்லை பல்கலையில் கரிசல் திருவிழா
திருநெல்வேலி: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.,யில் கரிசல் திருவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தொடர்பியல் துறை மாணவர்கள் மனோ மீடியா கிளப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு சார்பில் தொடர்பியல் துறை மாணவர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் ‘கரிசல் திருவிழா’ என்ற பெயரில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான கரிசல் திருவிழா வரும் பிப்ரவரி 1ம் தேதி துவங்கி, 3ம் தேதி வரை நடக்கிறது. இதில் போட்டோகிராபி, குறும்படம், டாக்குமென்டரி படம், ஆட்-மேட், மீடியா குவிஸ், ரேடியோ ஜாக்கி, அனிமேஷன், கிராபிக்ஸ் உட்பட பல்வேறு வகையான போட்டிகள் நடக்கின்றன. தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கரிசல் திருவிழா போட்டிகளில் பங்கேற்கின்றனர். போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 3ம் தேதி மாலையில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. ஏற்பாடுகளை தொடர்பியல் துறைத்தலைவர் கோவிந்தராஜூ, மனோ மீடியா கிளப் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.