உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் பங்களா உட்பட 7 இடங்களில் சோதனை

ஓமலுார்: பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதால் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்திட்டார். துணை வேந்தர் பங்களா, அலுவலகம் உட்பட ஏழு இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், 68. கடந்த, 2021 ஜூலையில் பதவி ஏற்ற இவருக்கு, ஜூன், 2024 வரை பதவிக்காலம் உள்ளது. சில மாதங்களுக்கு முன், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோ, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்:துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல்(பொ), கணினி அறிவியல் இணை பேராசிரியர் சதீஷ், திருச்சி, பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் ராம்கணேஷ் இணைந்து, பூட்டர் அறக்கட்டளை பெயரில் கல்வி நிறுவனமும், அப்டெக்கான் போரம் என, மற்றொரு அமைப்பையும் தொடங்கியுள்ளனர். இவர்கள், பெரியார் பல்கலை பிரதிநிதிகளாக இருந்துகொண்டு, அரசு அனுமதியின்றி துணை அமைப்புகளை தொடங்கி, இயக்குனர்களாக உள்ளனர். அதனால் ஜெகநாதன், தங்கவேல், சதீஷ், பல்கலை சட்டப்பிரிவு, 19ன் படி பொது ஊழியர்களாக கருதப்படுகின்றனர். புதிதாக தொழில் தொடங்க கூடாது. அதற்கு பல்கலை, தமிழக அரசு அனுமதி பெறவேண்டும். விதிமீறிய மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரித்து, நேற்று முன்தினம் மாலை, பல்கலையில் இருந்த துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். அவரை, சேலத்துக்கு அழைத்துச்சென்று, 4 மணி நேரம் விசாரித்தனர். அதேநேரம் புகார்தாரர் இளங்கோவை, கருப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.பின் கருப்பூர் போலீசார், ஜெகநாதன் மீது பல்கலை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது, சொந்த நிறுவனம் தொடங்கி லாப நோக்கில் செயல்பட்டது, போலி ஆவணங்களை தயாரித்து, தனி நிறுவனங்களை தொடங்கியது, பூட்டர் அறக்கட்டளை தொடங்கி நிதி வசூலித்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில், அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துதல், நம்பிக்கை மோசடி, கூட்டு சதி, புகார்தாரரை தகாத வார்த்தையால் திட்டுதல், ஜாதி பெயரை கூறி திட்டியது, மிரட்டல் விடுத்தல் உள்பட, 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.இரவு, 10:00 மணிக்கு, ஜெகநாதனை சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதால், இ.சி.ஜி., உள்ளிட்ட பல சோதனைகள், ஒரு மணி நேரம் நடத்தப்பட்டது. 11:30 மணிக்கு ஜே.எம்., 2 நீதிபதி தினேஷ்குமார் முன் ஆஜர்படுத்தினர். அப்போது ஜெகநாதனுக்கு ஆதரவாக வக்கில் ஆஜராகி பேசினார். அதில், ஒரு வாரத்துக்கு தினமும் சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்; 8ம் நாளில் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி, நிபந்தனை ஜாமின் வழங்கினார்.பின் கருப்பூர் ஸ்டேஷனில் இருந்த புகார்தாரர் இளங்கோ, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நிருபர்களிடம் கூறுகையில், துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்ய மேல்முறையீடு செய்யப்படும், என்றார்.இப்பிரச்னைக்கு இடையே, பல்கலையில் உள்ள பி.ஆர்.ஓ., அலுவலக அறையில் இருந்த கணினி, எஸ்டேட் அலுவலக அறை ஆகிய பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய, பல்கலை சார்பில் அந்தந்த அறைகளை பூட்டி, சீல் வைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று காலை, ஜெகநாதன், சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். மேலும், பல்கலை பதிவாளர் தங்கவேலின் வீடு, அலுவலகம், அவரது கணினி அறிவியல் துறை அலுவலகம், துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, அலுவலகம், கணினி அறிவியல் உதவி பேராசிரியர் சதீஷின் அலுவலகம், பெரியார் பல்கலை ஆய்வு மாளிகையில் தங்கியுள்ள, கேரளாவை சேர்ந்த புரோக்கர் சசிக்குமாரின் அறை என, 7 இடங்களில், உதவி கமிஷனர்கள் தலைமையில் குழுவினர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக, பல்கலை வளாகத்தில் உள்ள துணைவேந்தர் வீட்டுக்கு, மினி ஜெராக்ஸ், ஸ்கேனர் இயந்திரங்களை எடுத்துச்சென்றனர். அதில், கைப்பற்றிய ஆவணங்களை பிரதி எடுத்து பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்