உள்ளூர் செய்திகள்

நர்சிங் கவுன்சிலிங் நிறைவு

சென்னை: பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் முடிவில், தனியார் கல்லூரிகளில் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. பி.எஸ்சி., நர்சிங், பி.பார்மசி., பி.பி.டி., பி.ஓ.டி., ஆகிய துணை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங் கடந்த 4ம் தேதி முதல் நடந்து வந்தது. இப்படிப்புகளுக்கு நான்காயிரத்து 114 பேர் விண்ணப்பித்திருந்தனர். இக்கவுன்சிலிங், செப்., 15ம் தேதியுடன் முடிவடைந்தது. இப்படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த நான்காயிரத்து 114 பேரும் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டனர். அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் 75 இடங்களும், பி.பார்மசி., படிப்பில் 110 இடங்களும், பி.பி.டி., படிப்பில் 50 இடங்களும் உள்ளன. இப்படிப்புகளில் அரசு கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு, பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் இரண்டாயிரத்து 891 இடங்களும், பி.பி.டி., படிப்பில் 939 இடங்களும், பி.பார்மசி., படிப்பில் ஆயிரத்து 268 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. கவுன்சிலிங்கின் முடிவில், தனியார் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பில் 789 இடங்களும், பி.பி.டி., படிப்பில் 853 இடங்களும், பி.பார்மசி., படிப்பில் ஆயிரத்து 92 இடங்களும் காலியாக இருந்தன. அரசு கல்லூரியில் பி.ஓ.டி., படிப்பு வழங்கப்படவில்லை. இரண்டு தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு 65 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பி.ஓ.டி., படிப்பிற்கு ஒருவரும் விண்ணப்பிக்கவில்லை. இத்தகவலை மருத்துவ மாணவர் சேர்க்கைச் செயலர் ஷீலா தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்