முடிந்தது பிளஸ் 2 பொது தேர்வுகள்; மாணவர்கள் கொண்டாட்டம்
கோவை: மார்ச் 2ம் தேதி துவங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்றுடன் முடிந்தது.மாணவர்கள் தேர்வு மையங்களில் இருந்து ஓட்டமாக வெளியே வந்து நண்பர்களுடன் குதூகலத்தை பகிர்ந்து கொண்டனர். குழுவாக செல்பி எடுத்தும், ஒருவருக்கொருவர் சட்டைகளில் மையடித்தும், காகிதங்களை கிழித்து காற்றில் பறக்கவிட்டும் விடுமுறை காலத்தை வரவேற்றனர்.கோவை மாவட்டத்தில் 35,752 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். தவிர 498 தனித்தேர்வர்களும் எழுதினர். கடைசி நாளான நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், பயோ-கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட 11 பாடங்களுக்கான தேர்வு நடந்தது. 34,319 பேர் எழுதினர்.விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்ஜினியரிங் 'கட் - ஆப்' குறையலாம்வினாக்கள் குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ”அக்கவுன்ட்ஸ் குரூப்பை பொறுத்தவரை வணிகவியல் வினாத்தாள் சற்றே கடினமாக இருந்தாலும், இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அறிவியல் பிரிவில் இயற்பியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய தேர்வுகளின் வினாத்தாள்கள் எளிமையாக இருந்தன.ஆனால், வேதியியல் மற்றும் கணித வினாத்தாள்கள் கடினமாக அமைந்திருந்தன. வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டால் கட்-ஆப் அதிகரிக்கலாம். அதே சமயம், கணிதத்தில் சென்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால், இந்தாண்டு இன்ஜினியரிங் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.மாணவர்கள் கருத்துமுஹாசின்: தேர்வுகள் எளிதாகவே இருந்தன. நிச்சயம் நல்ல மதிப்பெண் பெறுவேன் என எதிர்பார்க்கிறேன். பள்ளி நாட்கள் முடிந்துவிட்டது என்ற வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், கல்லூரி என்ற அடுத்த அத்தியாயத்தை தொடங்க ரெடியாவது திரில்லாக இருக்கிறது.தர்ஷனா: அக்கவுன்ட்ஸ் குரூப்பில் எல்லா தேர்வுகளும் ஈசியாக இருந்தது என சொல்ல முடியாது. காமர்ஸ் சற்று கடினமாகவே அமைந்தது.இலக்கியா: இனிமையான பள்ளி நாட்கள் முடிந்துவிட்டன. அவுட் ஆப் சிலபஸ் கேள்வி எதுவும் இல்லை. சில வினாத்தாள் கடினமாக இருந்தன, பல எளிதாகவே இருந்தன.