உள்ளூர் செய்திகள்

விண்வெளி துறையில் 200 ஸ்டார்ட்அப்கள்; மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி: சந்திரயான் - 3 வெற்றிக்கு பின் விண்வெளி துறையில், 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகியுள்ளன என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் என்ற நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே வானொலியில் பேசி வருகிறார். அதன்படி, நேற்று ஒலிபரப்பான, 124வது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:கடந்த சில வாரங்களில் விளையாட்டு, கலாசாரம், அறிவியல் என பல்வேறு துறைகளில் நடந்த பல விஷயங்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளன. சமீபத்தில் விண்வெளி சென்ற இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, பூமி திரும்பியபோது, ஒட்டுமொத்த தேசமே பெருமை அடைந்தது.இதனால், குழந்தைகள் இடையே விண்வெளி துறை மீது அதீத ஆர்வம் எழுந்துள்ளது. விண்வெளி துறையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 50 நிறுவனங்கள் மட்டுமே காலுான்றிய நிலையில், சந்திரயான் - 3 வெற்றிக்கு பின் 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த துறையில் உருவாகியுள்ளன.சமீபத்தில், தமிழகத்தின் செஞ்சி கோட்டை உள்ளிட்ட மராட்டிய ராணுவ நிலப்பரப்பு, பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. இது உலகளவில் நமக்கு கிடைத்த பெருமை.அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டியில், 600 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்தது.மொத்தம், 71 நாடுகள் பங்கேற்ற விளையாட்டில், வெற்றி பெற்றவர்கள் பட்டியலில், முதல் மூன்று இடங்களுக்குள் நாம் இருந்தோம். வரும், 2029ல், இந்த விளையாட்டுகள் நம் நாட்டில் நடக்க உள்ளன.உத்தராகண்டில் உள்ள கீர்த்தி நகர் மக்கள் மலைப்பகுதிகளில் கழிவு மேலாண்மைக்கு ஒரு புதிய முன்மாதிரியாக உள்ளனர். உ.பி.,யின் லக்னோவின் கோமதி நதி குழுவினர், கடந்த 10 ஆண்டுகளாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து துாய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர்.சுதந்திர போராட்டக் காலம் முதல் கதர் பொருட்கள் நமக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளில், கதர் துறையுடன் இணைந்த லட்சக்கணக்கானோர், மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளனர்.அதேபோல், நம் கலாசாரத்தின் பன்முகதன்மைக்கான எடுத்துக்காட்டு ஜவுளித்துறை. கிராமப்புறத்தைச் சேர்ந்த பெண்கள் கூட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை துறையில் முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜவுளித் துறையில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட ஸ்டார் அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.பலகட்ட போராட்டத்துக்கு பின் பெற்ற சுதந்திரத்தின் பின்னால், சுதந்திர போராட்ட வீரர்களின் தவம் இருக்கிறது. நாம் அதை போற்றிப் பாதுகாக்க வேண்டும். நம் உறுதிப்பாடுகள் வாயிலாக அதை மேலும் வலுவுடையதாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்