உள்ளூர் செய்திகள்

பி.ஆர்க்., கவுன்சிலிங்: 250 பேருக்கு இடம் ஒதுக்கீடு

சென்னை: பி.ஆர்க்., படிப்பிற்கு ஜூலை 25ம் தேதி நடந்த மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் 250 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதனிடையே பி.ஆர்க்., படிப்பிற்கான கவுன்சிலிங், பல்கலைக் கழகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடந்தது. தேசிய அளவிலான ‘நாடா’ நுழைவுத் தேர்வு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் என மொத் தம் 400 மதிப்பெண் அடிப்படையில் பி.ஆர்க்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. பி.ஆர்க்., கவுன்சிலிங்கிற்கு தமிழக மாணவர்கள் 606 பேர், வெளிமாநில மாணவர்கள் 28 பேர் என மொத்தம் 634 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கில் மொத்தம் 250 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 84 பேர் ஆண்கள்; 166 பேர் பெண்கள். கவுன்சிலிங்கின் முடிவில் 46 இடங்கள் காலியாக இருந்தன. பி.ஆர்க்., படிப்பில் சேர பெண்கள் அதிக ஆர்வம் காட்டினர். எஸ்.ஏ.பி., கல்லூரியை தேர்வு செய்த மாணவி சந்திரா கூறுகையில், “மற்ற பொறியியல் படிப்புகளை விட, பி.ஆர்க்., படிப்பில் சேரவே விரும்பினேன். பி.ஆர்க்., படிப்பில் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்த முடியும் என்பதால் இப்படிப்பை தேர்ந்தெடுத்தேன்,” என்றார். பி.ஆர்க்., படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறுகையில், “பி.ஆர்க்., படிப்பில் கற்பனைத் திறனுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால், ஆண்களை விட பெண்கள் இப்படிப்பில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்