மாவட்டத்தில் தினமும் 300 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு திறன் கல்வி வழங்கல்
ஈரோடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படும், விழுதுகள் சேவை மையம் மூலம் தினமும், 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் திறன் கல்வி பெறுகின்றனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும், வருவாய் கோட்டங்களில் பிரதான விழுதுகள் சேவை மையமும், வட்டாரங்களில் துணை மையங்களும் அமைத்துள்ளன. அவ்வாறு, ஈரோடு காந்திஜி சாலை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்திலும், கோபியிலும் பிரதான மையமும், 16 வட்டார மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இங்கு, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு பிசியோதெரபி, சிறப்பு பயிற்சி, லேங்குவேஜ் தெரபி, ஆடியோ தெரபி, பேசும் பயிற்சி வழங்கப்படும். இங்கு, 3 முதல், 18 வயது குழந்தைகள், பிற காரணங்களால் மாற்றுத்திறனாளியான, 45 வயதுக்கு உட்பட்டோருக்கும் மறுவாழ்வுக்கான பயிற்சி தரப்படுகிறது.ஈரோடு, கோபியில் தினமும் காலை, 09:00 முதல் மாலை 04:00 மணி வரையும், பிற, 16 மையங்களில் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை பயிற்சி தரப்படுகிறது. கண் பார்வை குறைபாடு, உளவியல் பயிற்சி, பிசியோதெரபி போன்றவை பரிசோதனையுடன் தரப்படும். மன நலம் பாதித்த குழந்தைகள், முதுகு தண்டுவடம் பாதித்த குழந்தைகள், பார்வை, செவித்திறன், பேசும் திறன் குறைந்த குழந்தைகள், மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் என பல்வேறு பாதிப்புடைய குழந்தைகளுக்கும் பயிற்சி தரப்படுகிறது. இம்மையங்கள் கடந்த பிப்., 16ல் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டு, முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரோடு, கோபி மையங்களில் தினமும், 50 முதல், 54 பேர் வரையும், வட்டார மையங்களில் தினமும் தலா, 14 பேர் வரை என தினமும், 300 பேருக்கு மேல் பயிற்சி பெறுகின்றனர்.அவ்வாறான குழந்தைகளுக்கு வாழ்க்கை திறன் கல்வி, பெற்றோர், பாதுகாவலர்களுக்கான பயிற்சி, யூ.டி.ஐ.டி., கார்டுக்கு விண்ணப்பித்தல், அரசு நலத்திட்ட உதவி பெற விண்ணப்பித்தல், கல்வி உதவித்தொகை பெற உதவுதல், வேலைவாய்ப்பு வழிகாட்டல், உதவி உபகரணம் பெறுதல், புகார்களை பரிசீலித்தல் போன்றவற்றையும் செயல்படுத்துவதாக, மைய பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.