அரசுப் பள்ளிகளில் 840 மாணவர்கள் சேர்ப்பு
தேனி: கடந்த ஒரு மாதத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 840 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில் தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகள் 325, நடுநிலைப் பள்ளிகள் 99 உள்ளன. இப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்க மார்ச் முதல் வாரத்தில் துவங்கியது. பள்ளிகள் அருகே உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தை பருவ கல்வி முடிக்கும் மாணவர்களை அரசுப் பள்ளியில் சேர்த்தல், வீடுகளில் உள்ள மாணவர்களை முதலாம் வகுப்பிற்கு முந்தைய வகுப்புகளில் சேர்க்க அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் இதற்காக வீடுகள் தோறும் சென்று மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.கல்வித் துறையினர் கூறுகையில், “மாவட்டத்தில் ஒரு சில அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. இதில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் 24 பேர், முதலாம் வகுப்பில் 806 பேர், 2ம் வகுப்பில் 6 பேர், 3ம் வகுப்பில் மூவர், நான்காம் வகுப்பில் ஒரு மாணவர் என இது வரை மொத்தம் 840 பேர் அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்,” என்றனர்.