பள்ளிகளில் மாணவிகளுக்கு 97.5 சதவீதம் தனி கழிப்பறை வசதி: கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
புதுடில்லி: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட நாட்டில் உள்ள 97.5 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.6 முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கவும், அனைத்து அரசு மற்றும் அரசு-உதவிபெறும் பள்ளிகளில் பெண்களுக்கு தனி கழிப்பறை வசதிகளை உறுதி செய்யவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் தலைவரும் சமூக ஆர்வலருமான ஜெயா தாக்கூர் தாக்கல் செய்த பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது.இவ்வழக்கு விசாரணையில் மத்திய அரசு கூறியதாவது:டில்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 100 சதவீத இலக்கை எட்டியுள்ளன.மேலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு 16 லட்சம் கழிப்பறைகளும், மாணவியருக்கு 17.5 லட்சம் கழிப்பறைகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு 2.5 லட்சம் கழிப்பறைகளும், மாணவியருக்கு 2.9 லட்சம் கழிப்பறைகளும் கட்டப்பட்டுள்ளது.மேற்கு வங்கத்தில் 99.9 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 98.8 சதவீதம், தமிழகத்தில் 99.7 சதவீதம், கேரளாவில் 99.6 சதவீதம், சிக்கிம், குஜராத், பஞ்சாபில் 99.5 சதவீதம், சத்தீஸ்கரில் 99.6 சதவீதம், கர்நாடகாவில் 98.7 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 98.6 சதவீதம், மகாராஷ்டிராவில் 97.8 சதவீதம் , ராஜஸ்தானில் 98 சதவீதம், பீகாரில் 98.5 சதவீதம், ஒடிசாவில் 96.1 சதவீதம், காஷ்மீரில் 89.2 சதவீத பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.