உள்ளூர் செய்திகள்

கணக்கெடுப்பில் 15,643 பள்ளி செல்லா குழந்தைகள்!

செங்கல்பட்டு: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையினர் நடத்திய பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பில், 15,643 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில், 1,353 பேர் கண்டறியப்பட்டு, 271 பேர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை வாயிலாக, மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்களில், ஆறு முதல் 18 வயது வரையிலான பள்ளி செல்லா, இடைநின்ற, புலம் பெயர்ந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.இந்த கணக்கெடுப்பு பணியில், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.குழு நியமனம்பள்ளி செல்லா குழந்தைகளை கண்காணிக்க, பள்ளி மற்றும் வட்டார, மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களை மேற்பார்வையிட, செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மாதத்திற்கு ஒரு முறை, கலெக்டர் தலைமையில் நடக்கும் ஆய்வு கூட்டத்தில், கணக்கெடுப்பின் வாயிலாக திரட்டப்பட்ட விபரங்கள் குறித்தும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட குழந்தைகளை, உடனுக்குடன் பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய, ஆறு முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வயது இருந்தும், இதுவரை பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளை கண்டறிந்து, அவர்களையும் பள்ளியில் சேர்க்கும் பணி நடந்து வருகிறது.இந்த கணக்கெடுப்பில், 15,643 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 1,353 குழந்தைகள் கண்டறியப்பட்டனர். இதில், 271 பேர் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 1,082 மாணவர்களில், 10ம் வகுப்பு தேர்வில், 522 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில், மீண்டும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை மார்ச் மாதம் எழுத வைக்க, பள்ளி தலைமையாசிரியருக்கு, கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.மேலும், மீதமுள்ள 560 மாணவர்களை பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.ஆய்வு கூட்டம்இது தொடர்பான ஆய்வு கூட்டம், முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில், சுகாதார துறை துணை இயக்குனர் பரணிதரன், கூடுதல் எஸ்.பி., வேல்முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், பிளஸ் 2 மாணவியர் ஐந்து பேருக்கு, திருமணம் நடந்த தகவல் தெரியவந்தது. இதில், ஒரு மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. இதுதொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில், தலைமையாசிரியர்கள் மற்றும் குழுவினர் ஈடுபட வேண்டும் என, முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்