26 ஆண்டுகளாக சான்றிதழ் சமர்ப்பிக்காத துவக்கப்பள்ளி ஹெச்.எம்., சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, 26 ஆண்டுகளாக சான்றிதழ் சமர்ப்பிக்காத, அரசு துவக்கப்பள்ளி தலைமையாசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி, பழையபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார், 55. கடந்த, 1999 ஜன.,ல் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். கடந்த, 6 ஆண்டுகளாக குருபரப்பள்ளி அடுத்த போலுப்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.சிவக்குமார் பணியில் சேர்ந்தது முதல், 26 ஆண்டு களாக, அவரது, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை, சரிபார்ப்புக்கு எடுத்து வர கூறியும், அவர் செய்யவில்லை. சான்றிதழை சமர்ப்பிக்க கல்வித்துறை அலுவலர்கள் பலமுறை அறிவுறுத்தியும், அசல் சான்றிதழையோ அல்லது அதன் நகலையோ சமர்ப்பிக்கவில்லை.இதனிடையே அவர், போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்ததாகவும், மேலும் பல்வேறு புகார்களும் அவர் மீது வந்தன. இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலு வலர் (தொடக்கக்கல்வி) சவுந்திரராஜன் விசாரணை மேற்கொண்டார்.இதில், அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிந்தது. இதையடுத்து, ஒழுங்கு நடவடிக்கையாக, சிவகுமாரை 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கல்வி அலுவலர் உத்தர விட்டார்.