காஷ்மீரில் 50 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி
ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி மருத்துவகல்லூரியின் 50 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள வைஷ்ணோ தேவி கோவில் வாரியம் சார்பில் மாதா வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரி நடத்தப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 50 பேர் கொண்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கையில் 42 முஸ்லிம் மாணவர்களுக்கும் ஒரு சீக்கிய மாணவருக்கும் சேர்க்கை வழங்கப்பட்டது.இந்து பக்தர்களின் காணிக்கைகளால் நிதியளிக்கப்படுவதால், கல்லூரி சேர்க்கைகள் இந்துக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டு இந்து அமைப்பு குழுக்கள் போராட்டங்களை நடத்தியது. சுமார் 60 குழுக்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி சங்கர்ஷ் சமிதி எஸ்.எம்.வி.டி.எஸ்.எஸ் என்ற அமைப்பை உருவாக்கின. முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கையை ரத்து செய்யக் கோரியும், தொடர்ந்து மருத்துவக் கல்லூரியை மூடக் கோரியும் போராட்டத்தை நடத்தியது.தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் பட்சத்தில் பாதிக்கப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு கல்லூரிகளில் சேர்க்கப்படுவர் என மாநில முதல்வர் உமர் அப்துல்லா உறுதி அளித்தார்.இதனிடையே தற்போதைய கல்வி அமர்வுக்கான தேசிய கலந்தாய்வு செயல்முறை முடிவடைந்ததால், நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, அவர்களை வேறு இடங்களில் சேர்க்க முடியாது என்று ஜம்மு காஷ்மீர் தொழில்முறை நுழைவுத் தேர்வுகள் வாரியம் அரசிடம் தெரிவித்து உள்ளது.இதன் காரணமாக 50 எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.மக்கள் மாநாட்டுக் கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், சஜ்ஜாத் கனி லோன், எக்ஸ் வலை தளத்தில்:'வைஷ்ணோ தேவி மருத்துவக் கல்லூரியின் 50 மாணவர்களின் பொறுப்பிலிருந்து அரசாங்கம் கைகழுவிக் கொண்டிருக்கும் இந்த செயல் இரக்கமற்றது. அரசாங்கம் தனது வழக்கமான பாணியில் பழியை வேறு யார் மீதோ மாற்றிவிட்டது. இந்த மாணவர்கள் இப்போது கல்வி ரீதியாக நடுத்தெருவில் நிற்கிறார்கள், இப்போது யாருடைய கருணைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று கடவுளுக்கே வெளிச்சம்,' என்று பதிவிட்டு உள்ளார்.