படிப்பறிவில்லாத 90 சதவீத முஸ்லிம்கள்
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள கவிஞர் அப்துல் ரகுமானுக்கு தர்காக்கள் ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் நாகையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில் 90 சதவீத முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழேயும், ஐந்தாம் வகுப்பு மேல் படிக்காமல், படிப்பறிவில்லாமலும் உள்ளனர். இந்தியாவில்தான் முஸ்லிம் சமுதாயம் புதையலுக்கு மேல் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வக்பு வாரியத்திற்குச் சொந்தமான சொத்துக்களை முஸ்லிம் சமுதாய முன்னேற் றத்திற்காக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடங்கள் எங்கெல்லாம் பிரச்னை இல்லாமல் இருக்கிறதோ, அங்கு சமுதாய மேம்பாட்டிற்காக பள்ளிக் கூடங்கள்,தொழிற்கூடங்கள், மகளிர் சுய உதவிக்குழு பயிற்சி மையங்கள்,சமுதாய கூடங்களைக் கட்ட வேண்டும். முஸ்லிம் மத மகான்கள் யாரும் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. மகான்கள் மருத்துவம் பார்ப்பது, பிறருக்கு உதவுவது போன்ற சமுதாயப் பணியில் ஈடுபட்டனர் என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர வேண்டும். வரும் 10 ஆண்டுகளில் நமது நாட்டில் படிக்காத முஸ்லிம்களே இல்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அப்துல் ரகுமான் பேசினார்.