உள்ளூர் செய்திகள்

500 ஆண்டுகள் பழமையான கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

தேனி: தேனி மாவட்டம் சில்வார்பட்டி விநாயகர் கோயில் நிலவறையில் 500 ஆண்டுகள் பழமையான கி.பி., 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கன்னடக் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பாரதிராஜா. இவர் முதற்கட்ட தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சியில் பங்கேற்றார். சில்வார்பட்டியில் தொல்லியல் தடயங்களை தேடினார். அதில் அங்குள்ள விநாயகர் கோயில் நிலவறையில் உள்ள கன்னட கல்வெட்டை கண்டறிந்தார்.இவரது தகவலில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு தலைமையில், தொல்லியல் ஆய்வாளர்கள் நுார்சாகிபுரம் சிவக்குமார், ஆசிரியர் பயிற்றுனர் முருகேசபாண்டியன், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜபாண்டி ஆகியோர் அக் கல்வெட்டை ஆயவு செய்தனர்.ராஜகுரு கூறியதாவது:இக்கோயில் நிலவறையில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம், அரை அடி தடிமன் உள்ள ஒரு பலகைக் கல் உள்ளது. இது அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டுள்ளது. இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டு உள்ளன. அதன் கீழே 4 வரிகளில் கன்னட மொழி எழுத்துக்களால் ஆன கல்வெட்டு உள்ளது. இதனை மத்திய தொல்லியல் துறை சென்னைப்பிரிவு கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு படித்து விபரங்களை அளித்தார்.இதில் கன்னடத்தில் ஸ்ரீஹாலபையா கெளடா கிராம வேல்பரார பட்டா என உள்ளதாகவும், இக் கல்வெட்டின் எழுத்து அமைந்திருப்பதை கொண்டு இது கி.பி., 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என தெரிவித்தார். ஸ்ரீஹாலபையா கவுண்டரின் ஆளுமைக்குள் உள்ள கிராமத்தின் எல்லைக்கல், என்பது இதன் பொருள். அப்போதைய ஆட்சியாளராக (குறுநில மன்னர்) ஸ்ரீஹாலபைய கவுண்டர் இருந்திருக்கலாம்.இவர் விஜயநகர மன்னர்கள் காலத்தில் கர்நாடகாவில் இருந்து சில்வார்பட்டி பகுதியில் குடியேறியவராக மன்னர்களின் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது. அப்போது இவ்வூரில் புதிதாகக் குடியேறியவர்கள் கோயில்களை புனரமைத்து வழிபட்டு வருவதாக கோயில் நிர்வாகி கணேசன் தெரிவித்தார்.இக்கோயிலும், சிற்பங்களும் விஜயநகர மன்னர் கால, கலை அமைப்பில் உளளதும், இக்கோயிலில் உள்ள துாண்களில் நின்ற நிலையிலான இரு துவாரபாலகர்களின் சிற்பங்கள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்