கரூர்: தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் குமார், 393 நாட்களாகவும், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், 31 நாட்களாகவும் தலைமறைவாக உள்ளனர். கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் அரசியல்வாதிகளால், போலீஸ் உயர் அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி, முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக, 2023 ஜூன் 14ல் அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு நபரான செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. 393 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். அவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காக, லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை அமலாக்கத் துறையினரிடம் சிக்கவில்லை. அவரை, கைது செய்ய தமிழக போலீசார் ஒத்துழைக்கவில்லை என்ற புகாரும் உள்ளது.கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து கிரையம் செய்து கொண்டதாக, யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார் - பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார்.கரூர் குப்புச்சிபாளையம் பிரகாஷ், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தன் நிலத்தை போலி பத்திரம் மூலம் அபகரித்து விட்டதாகப் புகார் அளித்தார். இந்த இரு வழக்குகளையும், சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை, கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விஜயபாஸ்கர் தலைமறைவாகி, 31 நாள் ஆகியும், இதுவரை கைது செய்யப்படவில்லை. விஜயபாஸ்கரை தேடி வரும் போலீசார், அவர் தொடர்புடைய ஆதரவாளர்கள். உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை; விசாரணை என காய் நகர்த்துகின்றனர். அமலாக்கத்துறை மற்றும் போலீசாருக்கு கண்ணாமூச்சி ஆட்டம்காட்டி விட்டு தலைமறைவாக உள்ள அசோக், விஜயபாஸ்கர் ஆகியோரின் நடவடிக்கை, உயர் அதிகாரிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
ஆதரவாளர் வீடுகளில் சோதனை!
கரூரில் உள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலியான ஆவணங்களால் கிரையம் செய்து கொண்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தும் சி.பி.சி.ஐ.டி., போலீசார், கடந்த, 7ல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உட்பட, 7 இடங்களில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை மேற்கொண்டனர். விஜயபாஸ்கருடன் சேர்த்து புகார் கூறப்பட்ட கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு பஞ்சாயத்துக்குட்பட்ட அம்மன் நகரில் வசிக்கும் அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப மண்டல செயலரும், விஜயபாஸ்கரின் உறவினருமான கவின்ராஜும் தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில், அவரது வீட்டிலும் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் அ.தி.மு.க., ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப அணி துணைத்தலைவர் பசுபதி செந்தில் உள்ளிட்ட பலரை அழைத்து வந்து, போலி ஆவணங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைவிட்டு விட்டதா தலைமை?
கரூர் அ.தி.மு.க.,வினர் கூறியதாவது:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் இணக்கமான உறவு இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில், கட்சி முழுமையாக தோல்வி அடைந்ததும், இருவருக்குமான உறவில் விரிசல் விழுந்தது. இந்நிலையில், நிலமோசடி வழக்கில் சிக்கி இருக்கும் விஜயபாஸ்கருடன், ஆதரவாளர்கள், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலரையும் போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.ஆனால், இதுகுறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருக்கும் பழனிசாமி, 'அவரது தனிப்பட்ட வழக்கு என்பதால், கட்சி தலையிட முடியாது; அவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, கைவிரித்து விட்டதாக தகவல். இதனால் கட்சித் தலைமை மீது விஜயபாஸ்கரின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் அதிருப்தியில் உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.