கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 'மா' விவசாயிகளுடன், பா.ம.க., தலைவர் அன்புமணி கலந்துரையாடல் கூட்டம் நடத்தினார். அப்போது அவரை சூழ்ந்து, கேள்வி கேட்க முயன்ற நிருபர்களை தவிர்த்தபடி நடையை கட்டினார். 'நடைபயணத்தில் இருக்கும் 100 நாட்களும், அவர் பத்திரிகையாளர்களிடம் பேச மாட்டார்; மவுன விரதம் கடைப்பிடிக்கப் போகிறார்' என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0hr8tsxl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பா.ம.க., தலைவர் அன்புமணி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பெயரில், தமிழகம் முழுதும் 100 நாட்களுக்கு நடைபயணம் செல்ல முடிவெடுத்து, தொடர்ந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். வேளாண் பட்ஜெட் அந்த வகையில், நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி, ஓசூரில் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று காலை, கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியில், 'மா' விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசுகையில், 'தமிழகத்தில், வேளாண் பட்ஜெட் என தனி பட்ஜெட் போட அடித்தளம் இட்டவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ். அதன் பிறகுதான், தி.மு.க., வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் போட்டது. மா, நெல், கரும்பு விவசாயிகள் உட்பட அனைவருக்கும் துரோகம் செய்தது, தி.மு.க., அரசு' என்றார். இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆலோசனை நடத்தி, குற்றச்சாட்டுகளக்கு விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கட்சியினர், அன்புமணியிடம் கூறினர். இதனால் அப்செட் ஆன அன்புமணியிடம், இது குறித்து விளக்கம் கேட்க, பத்திரிகையாளர்கள் கங்கலேரியில் திரண்டனர். பத்திரிகையாளர்களை பார்த்ததும், கட்சியினரிடம் அன்புமணி ஏதோ செய்கை காட்ட, பா.ம.க.,வினர் அன்புமணி வந்த வாகனத்திற்கு முன், பிரசார வேனை நிறுத்தி, 'பிரசார பாடலை போடுங்கள்' எனக் கூறி, அன்புமணி வந்த வாகனத்தை சுற்றிலும் நின்று கொண்டனர். மைக் சத்தம் அதிகம் இருந்தபோதும், விடாத பத்திரிகையாளர்கள், அன்புமணியிடம், நோட்டீஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, 'மைக் சத்தம் அதிகமாக இருக்கிறது. கேள்விக்கு பிறகு பதில் சொல்கிறேன்' எனக் கூறி, அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றார் அன்புமணி. தொடர்ந்து ஓசூர், கெலவரப்பள்ளிக்குச் சென்ற அன்புமணியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். அங்கும் அவர் பதில் அளிக்கவில்லை. இது குறித்து, கட்சி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், 'உட்கட்சி விவகாரம் பெரிதாகி இருக்கிறது. அதனால், நடைபயணத்தில் இருக்கும் 100 நாட்களும், பேட்டி அளிப்பதில்லை என அன்புமணி முடிவெடுத்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் அமைதி காப்பார்' எனக் கூறினர்.