சென்னை: 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் நேற்று அவர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: கள்ளக்குறிச்சியில் நடந்த அரசு விழாவில், எனக்கு சவால் விட்ட முதல்வர் ஸ்டாலின், 'அ.தி.மு.க., ஆட்சியில், 5 சதவீத பணிகள்தான் நிறைவு பெற்றன' எனக்கூறி உள்ளார். அவர் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்டமே அ.தி.மு.க., ஆட்சியில்தான் உதயமானது. ஐந்தரை லட்சம் கோடி
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், '100 நாள் வேலை திட்டம், 150 நாளாக உயர்த்தப்படும்' என கூறினர். ஆனால், செய்யவில்லை. தற்போது, அ.தி.மு.க., கோரிக்கையை ஏற்று, 125 நாளாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 150 நாளாக உயர்த்தப்படும்; சம்பளமும் உயர்த்தி வழங்கப்படும். கொரோனா காலத்தில், பொங்கலின்போது, அ.தி.மு.க., அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 2,500 ரூபாய் வழங்கியது. அப்போது, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என சொன்ன ஸ்டாலின், கடந்த பொங்கலுக்கு ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. நாட்டிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இதுதான் தி.மு.க. அரசின் சாதனை. நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று, தமிழக மக்களை கடனாளியாக்கி உள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், அமைச்சர் தியாகராஜன் பேசிய 'ஆடியோ' வெளியானது. அதில், 30,000 கோடி ரூபாயை வைத்துக்கொண்டு உதயநிதி, சபரீசன் என்ன செய்வது எனத் தெரியாமல் குழம்பி இருப்பதாக தெரிவித்தார். அதற்கு ஸ்டாலின் இதுவரை மறுப்பு தெரிவிக்கவில்லை. கடன் பெற்ற பணம் எல்லாம் மேலிடத்துக்கு சென்றுள்ளது. டாஸ்மாக் ஊழல், உள்ளாட்சி நிர்வாக பணி நியமன ஊழல் குறித்து, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட இலவச 'லேப்டாப்' திட்டம் தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்டது. தேர்தல் வரும் நிலையில், ஓட்டுப்போடும் வயதுடைய கல்லுாரி மாணவ - மாணவியருக்கு, லேப்டாப் வழங்கப்போவதாக கூறுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், ஐந்து லட்சம் மகளிருக்கு, 25,000 ரூபாய் மானியத்தில், 'அம்மா' இருசக்கர வாகனம் வழங்கப்படும். தி.மு.க., ஆட்சி அகற்றப்பட மூன்று அமாவாசை தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். தமிழிசை பங்கேற்பு
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, திருப்போரூரை தொடர்ந்து, சோழிங்கநல்லுாரில் பிரசாரம் மேற்கொண்டார். அதில், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை பங்கேற்று, பழனிசாமிக்கு செங்கோல் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார். இந்த பிரசார கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர் லியோ சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., சிங்காரம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். 'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.