சென்னை: டில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து பேசினார். அப்போது அவர்களிடம், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேர் மீது தொகுதி மக்கள் அதிருப்தியாக உள்ளதாக வெளியான சர்வே முடிவுகளை, தி.மு.க., மூத்த எம்.பி., ஒப்படைத்த தகவல் வெளியாகி உள்ளது.டில்லியில் கடந்த 24ம் தேதி, 'நிடி ஆயோக்' கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். மக்கள் மனநிலை
முன்னதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரை சந்தித்து பேசினார். தி.மு.க., மூத்த எம்.பி.,க்கள் சிலரும் சந்தித்து பேசினர். தமிழகத்தில் காங்கிரசுக்கு, 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களின் தொகுதிகளில், மக்களின் மனநிலை எப்படி உள்ளது என, தி.மு.க., கட்சியின் ஆதரவு நிறுவனம், உளவுத்துறை, தனியார் நிறுவனம் என, மூன்று சர்வே எடுக்கப்பட்டது. அவை அளித்த அறிக்கையின்படி, காங்கிரசின் 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது, அவர்களது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரியவந்தது. வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் அவர்கள் போட்டியிட்டால், காங்கிரஸ் வெற்றி பெறாது என்றும், அதற்கான காரணங்கள் குறித்தும், சர்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வே அறிக்கை பட்டியல் மூன்றையும், சோனியாவிடம் தி.மு.க., மூத்த எம்.பி., ஒருவர் ஒப்படைத்து, வேட்பாளர்களை மாற்றுங்கள் அல்லது தொகுதிகளை மாற்றி தருகிறோம் எனக்கூறி உள்ளார். இதுகுறித்து, காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், 25 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டு, 18 இடங்களை வென்றது. ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில், திருமகன் ஈ.வெ.ரா., மறைவுக்கு பின், அவரது தந்தை இளங்கோவனுக்கு சீட் வழங்கி, அவரும் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பின், மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு போட்டியிட வாய்ப்பு தராமல், தி.மு.க., களம் இறங்கி வெற்றி பெற்றது.இது, காங்கிரஸ் தொண்டர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், டில்லி மேலிடம் கண்டு கொள்ளவில்லை. காரணம், தேர்தலில் போட்டியிட்டால் செலவு செய்ய வேண்டும் என்பதால், தொகுதியை தி.மு.க., கேட்டதும் விட்டுக் கொடுத்து விட்டனர். இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 17 ஆக குறைந்தது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளை கேட்க வேண்டும் என, காங்., நிர்வாகிகள் விரும்புகின்றனர். ஆனால், கடந்த முறையை விட, குறைந்த தொகுதிகளை ஒதுக்க, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.வரும் சட்டசபை தேர்தலில் த.வெ.க., போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும் என தி.மு.க., எதிர்பார்க்கிறது. வெற்றிக்கனி
இதனால், காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை மட்டும் ஒதுக்கிவிட்டு, மற்ற தொகுதிகளில் தி.மு.க., வேட்பாளரை நிறுத்தி தொகுதியில் நிறைய பணம் செலவு செய்து வெற்றிக்கனியை பறிக்க வேண்டும் என, தி.மு.க., முடிவு செய்துள்ளது.காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கும்பட்சத்தில், அக்கட்சி தோல்வி அடையுமானால், தி.மு.க., ஆட்சி அமைப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் அதிக தொகுதிகள் கொடுத்தால், ஆட்சியில் பங்கு கேட்பர். இதை தவிர்க்க, வரும் தேர்தலில் 200 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட திட்டமிட்டுள்ளது.எனவே, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிகள் எண்ணிக்கையை குறைக்க, 12 எம்.எல்.ஏ.,க்கள் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக, தி.மு.க., தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.தி.மு.க.,வின் எண்ணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். காங்., - எம்.எல்.ஏ.,க் கள் தொகுதிகளுக்குள் புகுந்து, அவர்கள் செயல்பாடு எப்படி என்று, தி.மு.க., தரப்பு சர்வே எடுத்திருப்பது நியாயமில்லாத செயல். என்னதான், தமிழகத்தில் 'இண்டி' கூட்டணிக்கு தி.மு.க., தலைமை தாங்கினாலும், இப்படியெல்லாம் பெரியண்ணன் பாணியில் நடந்து கொள்வது சரியல்ல.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் செயல்பாடு எப்படி என்பதை அறிய, அவர்கள் தொகுதிகளுக்குச் சென்று, காங்., தரப்பில் சர்வே எடுத்து, தி.மு.க., தலைமைக்கு வழங்கினால், அதை அக்கட்சியினர் ஏற்பரா?இந்த விஷயத்தில் தி.மு.க., செயல்பாடு, கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.