உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் / சர்வர் பிரச்னை தீர்ந்தது; ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்!

சர்வர் பிரச்னை தீர்ந்தது; ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்களை பதிய, பொதுமக்கள் நேரடியாக வந்தால், கூடுதல் செலவு தவிர்க்கப்படும்' என, சார் - பதிவாளர்கள் தெரிவித்தனர்.சொத்து பத்திரங்களை தயாரிக்க, ஆவண எழுத்தர்களை தான், பொதுமக்கள் நாடுகின்றனர். அவர்கள் வழியாக வரும் பத்திரங்களே பதிவுக்கு ஏற்கப்படுவதால், நேரடியாக யாரும் சார் - பதிவாளர்களை அணுகுவதில்லை. அப்படியே அணுகினாலும், சார் - பதிவாளர்கள் நிராகரிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இப்பிரச்னையில் பதிவுத் துறை சில நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி, பதிவுத்துறை இணையதளத்தில் உள்ள மாதிரி பத்திரங்கள் அடிப்படையில், ஆவணங்களை மக்கள் தயாரித்துக்கொண்டு வந்தால், அதை பதிவு செய்ய வேண்டும். அவர்களை வேண்டுமென்றே ஆவண எழுத்தர்களிடம் அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேரடியாக வருவோருக்கு பத்திரங்களை பதிய, சார் - பதிவாளர்கள் முன்வந்துள்ளனர். இது குறித்து, சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் கூறியதாவது: எனது சொத்தை வங்கியில் அடமானம் வைப்பதற்கான பத்திரத்தை பதிவு செய்ய, ஆவண எழுத்தர்களை அணுகினேன். முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் தவிர்த்து, 4,000 ரூபாய் முதல், 7,000 ரூபாய் வரை கேட்டனர். ஆனால், அடமான பத்திரம் பதிய, 100 ரூபாய் பதிவு கட்டணம், சொத்து மதிப்புக்கு ஏற்ப முத்திரை தீர்வை சேர்த்தால், அதிகபட்சம், 1,000 ரூபாய் தான் செலவாகும்.பதிவுத் துறை இணையதளத்தில் உள்ள மாதிரி ஆவண அடிப்படையில், அடமான பத்திரம் தயாரித்து பதிவுக்கு தாக்கல் செய்தேன். நேரடியாக தாக்கல் செய்ததால், கூடுதல் செலவு இன்றி பத்திரம் பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, பதிவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆவண எழுத்தர் வாயிலாக சென்றால் தான், பத்திரப்பதிவு நடக்கும் என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது. மக்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, பத்திரப் பதிவு செய்யலாம். நேரடியாக செல்வதன் வாயிலாக, தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

'சர்வர்' பிரச்னை தீர்ந்தது

பதிவுத்துறை தகவல்களை சேகரித்து வைக்கும் 'சர்வர்' வன்பொருள் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட இந்த கோளாறை சரி செய்யும் பணிகள் நடந்து வந்தன. நேற்று இக்கோளாறு சரி செய்யப்பட்டு, பத்திரப்பதிவு பணிகள் பிரச்னை இன்றி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SIVABALAN M
ஜன 06, 2026 20:31

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு ஆவண பதிவுக்கு குறைந்தபட்சம் 1500 ரூபாய் பதிவுக்கு தாக்கல் செய்பவரிடம் மறைமுகமாக வசூல் நடைபெறுகிறது, ஆவண பதிவுக்கு பொதுமக்கள் ஆவண எழுத்தரை நாடுகின்றனர். எந்த ஆவண எழுத்தர் சார்பதிவாளரை நன்றாக கவனிக்கிறாரோ அவரது ஆவணங்கள் விரைவாக பதிவு செய்யப்படுகிறது. நான் வழக்கறிஞராக என்னை நாடி வரும் மக்களுக்கு ஆவணம் தயார் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய உதவி வருகிறேன். சார்பதிவாளர் அலுவலகத்தில் இதுவரை லஞ்சம் கொடுத்ததில்லை. அதனால் நான் சமர்ப்பிக்கும் ஆவணம் வேண்டுமென்றே முறையான காரணம் இல்லாமல் இழுத்தடிக்கப்படும் அல்லது அலைக்கழித்து பதிவு செய்யப்படும். கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் ஒரு ஆவணத்திற்கு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1500 ரூபாய் சார்பதிவாளர் உட்பட அலுவலக ஊழியர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு. இதுகுறித்து மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறையீடு செய்தாலும் கண்டுகொள்வதில்லை, ஊழலில் அவர்களுக்கும் பங்கு போகும் போல... பதிவு துறையில் ஊழல் இல்லாத நேர்மையான வெளிப்படையாக அனைத்து ஆவண பதிவுகளும் நடைபெறுவதாக அரசு விளம்பரபடுத்துவதே தவிர எந்த உண்மையும் இல்லை. பதிவு துறை ஊழலில் இயங்கி கொண்டிருக்கிறது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பொதுமக்கள் நேரடியாக தங்கள் ஆவணத்தை பதிவு செய்வர்.


Balaa
ஜன 06, 2026 18:33

இதெல்லாம் சும்மா உளு உளுவா... சார்பதிவாளர் அலுவலகம் முழுவதும் ஏஜன்டுகள் ஆதிக்கம் தான். ஊழல் என்று ஒன்று இருக்கும் வரை இது மாறாது.


Saai Sundharamurthy AVK
ஜன 06, 2026 10:17

சார்பதிவாளர் ஏஜெண்ட்டை அணுகச் சொல்வார். ஏனெனில் லஞ்சம் அவர் மூலமாகத் தான் போகிறது. நேரடியாக வாங்குவதில்லை. இன்னொரு விஷயம் என்னவென்றால் பத்திரம் பதிவு செய்த நாளிலேயே சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற விதி எல்லாம் கடைபிடிப்பதில்லை. ஆனால், அந்நாளிலேயே பெற்றுக் கொண்டதாக ரெஜிஸ்திரில் கையெழுத்து வாங்கி விடுகிறார்கள். அந்த ரிஜிஸ்டர் செய்யப்பட்ட பத்திரம் சம்பந்தப்பட்டவரிடம் ஒப்படைக்க ஒரு மாதம் வரை இழுத்தடிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்டவர் ஏற்கனவே பெற்றுக் கொண்டதாக கையெழுத்து போட்டுக் கொடுத்திருப்பதால் இந்த இழுத்தடிப்பு குறித்து சார்பதிவாளர் மீது புகார் அளிக்க முடியாது. சார்பதிவாளர்களின் மூளை எப்படியெல்லாம் வேலை செய்கிறது பாருங்கள். ஏனெனில் ஒரு பெரிய ஊரில் போஸ்டிங் வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் மூன்று கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறதாம். அதில் குறிப்பிட்ட சதவிகிதம் மேலிடத்திற்கு அமைச்சர்கள் தர வேண்டுமாம். மேலும் போஸ்டிங் என்பது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை என்பதால் அந்த மூன்று கோடி பிளஸ் லாபம் என்று அந்த போஸ்டிங் காலத்திற்குள் சார்பதிவாளர்கள் சம்பாதித்துக் கொண்டு விட வேண்டும். எப்படி இந்த டீல் !!! ......அருமையாக இருக்கிறது அல்லவா ????


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை