உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரி : புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் புதுநகர் 4வது குறுக்குத் தெருவில் நேற்று காலை 8:30 மணிக்கு பாதாள சாக்கடையில் இணைப்பு கொடுக்கப்பட்ட வீடுகளில் உள்ள கழிவறைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் மகள் செல்வராணி,16; பிளஸ் 1 மாணவி. கழிவறைக்கு சென்றார்.அவர், வெகுநேரமாகியும் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது சகோதரர் ஜானி, தாத்தா ஆசீர்வாதம் ஆகியோர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது, செல்வராணி விஷவாயு தாக்கி கழிவறையில் மயங்கி கிடந்தார். உடனடியாக கழிப்பறை கதவை உடைத்து அவரை வெளியே கொண்டு வந்தனர். அதேபோல, செல்வராணி வீட்டில் இருந்து 6வது வீட்டில் வசிக்கும் மூதாட்டி செந்தாமரை, 80; விஷவாயு தாக்கி கழிவறையில் மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது மகள் காமாட்சியும், 45; கழிவறையில் மயங்கி விழுந்தார்.இருவரையும் காப்பாற்ற சென்ற பேத்தி பாக்கியலட்சுமி, 28; மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், 60; ஆகியோரும் கழிவறையில் மயங்கி விழுந்தனர். இதனால் புதுநகர் முழுதும் பரபரப்பு ஏற்பட்டது.வீட்டில் இருந்து அனைவரும் வெளியே ஓடி வந்து, ''விஷவாயு தாக்குகிறது. வெளியே வாருங்கள்'' என சத்தம் எழுப்பினர்.விஷவாயு தாக்கி மயங்கிய அனைவரும் ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வீடுகளில் இருந்து அனைவரும் வெளியேறினர்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி செல்வராணி, செந்தாமரை, காமாட்சி ஆகிய மூவரும் உயிரிழந்தனர். பாக்கியலட்சுமி, பாலகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில், பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு, வீடுகளின் கழிவறை குழாய்கள் வழியாக வெளியேறி உள்ளது. கழிவறைக்கு சென்றவர்கள் அந்த வாயுவை சுவாசித்து, மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

அதிகாரிகள் குழு விசாரணை

பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் தலைமையில் அதிகாரிகள் வீடு வீடாக சென்று, விஷவாயு வருகிறதா என ஆய்வு செய்தனர். சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு தலைமையில் 20 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர், பாதாள சாக்கடையில் உருவான விஷவாயு தாக்கி வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என வீடு வீடாக சென்று பரிசோதனை செய்தனர்.சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மற்றும் உயிரிழந்தவர் வீடு கழிவறையில் விஷவாயுவின் தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன இயந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.

அன்றே சொன்னது 'தினமலர்'

புதுநகர் அருகில் உள்ள அரசின் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, தொழிற்சாலை மற்றும் மருத்துவ கல்லுாரி கழிவுகள் நேரடியாக வருவதால், சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீரை சுத்திகரிக்க முடியாமல் திணறுகிறது. அதனால் உருவாகும் துர்நாற்றம் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது என, கடந்த மே 29ம் தேதி புகைப்படத்துடன் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால், அதிகாரிகள் யாரும் அதனை கண்டுகொள்ளவில்லை.

நிவாரணம் அறிவிப்பு

சம்பவ இடத்தை முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், கலெக்டர் குலோத்துங்கன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சென்று ஆய்வு செய்தனர். விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ரங்கசாமி, சிறுமி குடும்பத்திற்கு ரூ. 30 லட்சம், மற்ற இருவர் குடும்பத்திற்கும் தலா ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என, அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்