| ADDED : ஜூன் 18, 2024 05:00 AM
புதுச்சேரி: ஆலங்குப்பத்தில் மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்ததால் பி.டெக் பட்டதாரி வாலிபர் உயிரிழந்தார்.புதுச்சேரி சஞ்சீவி நகர், திண்டிவனம் வீதியைச் சேர்ந்தவர் கந்தன். கட்டட தொழிலாளி. இவருக்கு 2 மகன், 1 மகள் உள்ளனர். மூத்த மகன் அவினாஷ், 23; பி.டெக்., முடித்து விட்டு, தேங்காய் சீரட்டையில் கைவினை பொருட்கள் செய்யும் வேலை செய்து வந்தார். ஆப்பிரம்பட்டு கிராமத்தில் உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் சென்ற அவினாஷ், மதியம் 3:15 மணிக்கு திருச்சிற்றம்பலத்தில் சாப்பிட்டுவிட்டு, யமாகா எப்.இசட் பைக்கில் கோட்டக்கரை வழியாக ஆலங்குப்பம் திரும்பினார். மாலை 3:30 மணிக்கு, கோட்டக்கரை சாலையோரம் இருந்த பனைமரம் ஒன்று திடீரென தமிழக பகுதி உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. இதனால் 4 மின் கம்பங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்தது. இதில் ஒன்று பைக்கில் சென்ற அவினாஷ் மீது மின் கம்பம் விழுந்தது. இதில், அவினாஷ்க்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவினாஷின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள், டாடா ஏஸ் வாகனம் மூலம் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவினாஷ் உயிரிழந்தார்.தொகுதி எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரம், உயிரிழந்த அவினாஷ் பெற்றோரை சட்டசபை அழைத்து சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து முறையிட்டார். அவினாஷ் உடல் அடக்கம் செய்ய முதல்வர் ரங்கசாமி ரூ. 25 ஆயிரம் பணம் வழங்கினார். அரசு மூலம் ரூ. 10 லட்சம் நிவாரணமும், ரூ. 2 லட்சம் காப்பீடு திட்டத்தின் கீழ் நிவாரண தொகை வழங்குவதாக உறுதி அளித்தார். கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ரூ. 25 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.