| ADDED : மே 15, 2024 01:21 AM
புதுச்சேரி : புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு நேற்று முன்தினம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதன் விபரம்:அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பிறகும் ஊழியர்கள் பலர் தங்களது இருக்கைகளில் இருப்பது இல்லை என புகார்கள் வருகிறது. குறிப்பாக, மக்களுடன் நேரடியாக தொடர்புடைய அரசு அலுவலகங்களிலும் இதுபோன்ற புகார்கள் வருகிறது.அரசு ஊழியர்கள் அனைவரும் தாமதம் இல்லாமல் அலுவலகத்துக்கு வர வேண்டும். அலுவலக நேரங்களில் முழுமையாக தங்களது இருக்கையில் இருந்து பணிகளை கவனிக்க வேண்டும். தாமதமான வருகை குறித்த விரும்பத்தகாத சூழல் தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி, தொடர்ச்சியாக கால தாமதமாக வருபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனவே, துறை தலைவர்கள் தங்களது ஊழியர்களுக்கு தகுந்த அறிவுறுத்தல்களை வழங்கி, குறித்த நேரத்தில் அலுவலகத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், துறை தலைவர்கள் தங்களது அலுவலகத்தில் திடீர் சோதனைகள் நடத்தி ஊழியர்கள் குறித்த நேரத்தில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தாமதமாக வருபவர்கள் மீது நடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.