| ADDED : ஜூன் 01, 2024 06:18 AM
விழுப்புரம் : செஞ்சி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகப்பன் மகன் ராஜசேகர், 31; எலக்ட்ரீஷியன். இவர், கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி குடிபோதையில் ஒரு வீட்டிற்குள் நுழைந்து, அங்கு தனியாக இருந்த 22 வயது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த ராஜசேகர், தலையணையால் பெண்ணின் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றார். அதற்குள் அக்கம், பக்கத்தினர் வரவே, ராஜசேகர் தப்பி சென்றார்.புகாரின் பேரில், ராஜசேகரை கைது செய்த செஞ்சி அனைத்து மகளிர் போலீசார், அவர் மீது வழக்கு, விழுப்புரம் எஸ்.சி., - எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கோதண்டபாணி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம் சாட்டப்பட்ட ராஜசேகருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.