சாமந்திப்பூ விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை
திருக்கனுார் : சாமந்திப்பூ விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், திருக்கனுார் பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.புதுச்சேரி, திருக்கனுார், கூனிச்சம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழக பகுதியான மதுரப்பாக்கம், குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் குண்டுமல்லி, ஆம்பூர் மல்லி, சம்மங்கி, சாமந்தி உள்ளிட்ட பூக்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், சாமந்திப்பூ அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பூக்கள் திண்டிவனம், விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன.இப்பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக சாமந்தி பூ விளைச்சல் அதிகரித்தது. இதனால் சந்தைகளில் பூக்களின் விலை குறைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சம்மந்தி பூ கிலோ 80 முதல் 100 ரூபாய் வரை விற்பனையானது. இந்தாண்டு விவசாயிகள் அதிக அளவில் சாமந்தி பூ சாகுபடி செய்துள்ளனர். இதன் காரணமாக சாமந்திப்பூ விளைச்சல் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் விலை கடுமையாக குறைந்துள்ளது. 100 ரூபாய்க்கு சாமந்தி விற்பனையான நிலையில் 35 கிலோ கொண்ட மூட்டை சாமந்திப் பூவை 100 ரூபாய்க்கு கீழ் தான் கேட்கின்றனர். இதனால், சாகுபடி செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளோம்' என்றனர்.