புதுச்சேரி : பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு இழப்பீட்டு தொகையாக, 17 லட்சத்து 12 ஆயிரத்து, 500., ரூபாயை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன், பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அவரது இறப்புக்கு முதல் தவணையாக 50 சதவீத நிதி 4 லட்சத்து, 12 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் அரசின் கூடுதல் நிவாரணமாக 3 லட்சம், என மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிதி அந்த சிறுமியின் பெற்றோரிடம், கடந்த, 9ம் தேதி வழங்கப்பட்டது. இந்நிதிக்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார். இதையடுத்து, ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், எதிர்பாராத விபத்தில் இறக்கும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 10 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை, சிறுமியின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. இழப்பீட்டு தொகையை, முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரிடம், நேற்று சட்டசபையில் தனது அலுவலகத்தில் வழங்கினார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ.,கள் கல்யாணசுந்தரம், பிரகாஷ்குமார், துறை இயக்குநர் இளங்கோவன் உட்பட பலர் உடன் இருந்தனர்.