| ADDED : மே 21, 2024 05:02 AM
புதுச்சேரி: காங்கிரசை விட்டு ஓடியவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க மாட்டோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.புதுச்சேரி வந்த ராஜிவ் ஜோதி யாத்திரை நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியதாவது:மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது. ராகுல்பிரதமர் ஆகப்போகிறார். 2026ல் புதுச்சேரியில் ஆட்சிமாற்றம் வரப்போகிறது. காங்., கட்சிக்கு துரோகம் செய்துவிட்டு, சொத்துக்களை காப்பாற்ற, கையூட்டு பெற்று ஓடிப் போனவர்கள் யார் என்பது எல்லாம் புதுச்சேரி மக்களுக்கு தெரியும்.காங்., தலைவர் ராஜிவ் நினைவுநாளில் மிகப்பெரும் சபதம் ஏற்றுள்ளோம். காங்கிரசுக்கு துரோகம் செய்துவிட்டு கட்சியை விட்டு வெளியேறியவர்களை எக்காரணம் கொண்டும் மீண்டும் காங்., சேர்க்கக்கூடாது என மாநில தலைவரை வலியுறுத்தியுள்ளோம்.பதவி சுகம், பணத்துக்காக தன்மானத்தை விட்டு கட்சியை விட்டு ஓடியவர்களை காங்கிரசில் சேர்க்க மாட்டோம். பிரதமர் தேர்தலுக்கு நன்கொடை வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இதற்காக பிரதமர், உள்துறை அமைச்சரை கைது செய்யலாமா. இதற்கு பிரதமர், உள்துறை அமைச்சர் என்ன பதில் தர போகிறார்கள். எதிர்கட்சிகள் மீது, எதிர்கட்சி தலைவர்கள் மீது பொய்யான வழக்கை போட்டு கைது செய்யும் வேலையை பா.ஜ., செய்து வருகிறது. பா.ஜ., ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்கிறது. அதனால்தான் ஓட்டுச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என காங்., வலியுறுத்தி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
இண்டியா கூட்டணி பெரும் வெற்றி
காங்., தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, 'ஓட்டுப்பதிவில் ஒருவர் எட்டு முறை ஓட்டளித்தன் மூலம் அராஜகத்தின் உச்சக்கட்டத்தில் பா.ஜ., செயல்படுவது தெளிவாகிறது. நிச்சயமாக மக்கள் மாற்றுவார்கள். ஒருவர் போட்டிருக்கலாம். மீதமுள்ள மக்கள் பா.ஜ.,வை வெறுக்கிறார்கள் என்பதே உண்மை. இண்டியா கூட்டணி பெரும் வெற்றி பெறும்' என்றார்.