கொல்லைப்புற நியமனத்திற்கு கவர்னர்... செக்; அனைத்து துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை
புதுச்சேரி: கொல்லைப்புற நியமனத்திற்கு துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கவர்னரின் உத்தரவின்பேரில் எச்சரிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வேலை வாய்ப்பகத்தில் பல லட்சம் இளைஞர்கள் பதிந்து காத்திருக்கும் நிலையில், எந்த ஆட்சி நடந்தாலும் கொல்லைப் புறமாக ஆட்களை திணிப்பது தொடர் கதையாக உள்ளது. சொசைட்டி என்ற பெயரில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு அரசு பணிகளை வாரி வழங்குகின்றனர்.அதன்படி கடந்த காலங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆசியுடன் கொல்லைப்புறமாக கேஷவல் லேபர் என்ற பெயரில் குறுகிய கால பணிக்கு ஊழியர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். பல ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு பிற அரசு ஊழியர்கள் போன்று எந்த சலுகையும் கிடைப்பதில்லை. அரசு ஊழியர்கள் நியமன விதிகளின்படி, ஒரு அரசு ஊழியர் ஆண்டிற்கு 240 நாட்கள் பணி புரிந்து, அவர் மேலும் இரண்டு ஆண்டுகள் வரை தொடர்ந்து பணி செய்து இருந்தால் அவரை சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஆனால் பணி நிரந்தரம், பதவி உயர்வு ஏதும் இல்லாமல் சொற்ப சம்பளத்தில் அரசு ஊழியர்களாக பெயருக்கு வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பணி பாதுகாப்பு கேட்டு வீதியில் இறங்கி பல மாதமாக போராட்டம் நடத்துவது வாடிகையாகிவிட்டது.இதுபோன்ற சூழ்நிலையில் சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் கொல்லைப்புற நியமனத்திற்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடியாக நிர்வாக சீர்த்திருத்த துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, நிர்வாக சீர்த்திருத்த துறையும் அனைத்து துறைகளுக்கும் அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதுச்சேரி அரசின் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், தங்களது துறைகளில் அரசு பணி நியமனங்களை செய்ய உரிய தேர்வு செயல்முறையை பின்பற்ற வேண்டும்.ஆட்சேர்ப்பு விதிகளின்படி அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் அவை தீவிரமாகப் பார்க்கப்படும். அத்தகைய சட்டவிரோத கொல்லைப்புற நியமனங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மீது எந்தவித தயக்கமும் இன்றி உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. திடீர் அதிரடி ஏன்?
அண்மையில் புதுச்சேரி பாலிடெக்னிக்கில் 18 விரிவுரையாளர்கள் நியமனத்தில் கடும் அதிருப்தியை சுப்ரீம் கோர்ட் வெளிப்படுத்தியது. இந்த சட்ட விரோத நியமனத்தினை விசாரித்து, தற்போது பதவியில் இருந்தாலும் சரி, ஓய்வு பெற்றாலும் சரி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த அறிக்கையை மே 14ம் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி புதுச்சேரி அரசு துறைகளில் கொல்லைப்புறமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை கருணை அடிப்படையில் வேலை பெற்ற வவுச்சர் ஊழியர்கள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கிலும், கடும் அதிருப்தியை நீதிமன்றம் வெளிபடுத்தியது.இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உள்ள கொல்லைபுற நியமனத்தை முற்றிலும் ஒழிக்க தலைமை செயலர் மொத்தமுள்ள 56 அரசு துறைகளுக்கு சுற்றிக்கை அனுப்ப வேண்டும். அப்படி கொல்லைபுற நியமனம் செய்த துறை இயக்குனர்களையும் இவ்வழக்கில் பிரதிவாதியாக சேர்த்து தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது. இதையடுத்தே கொல்லைபுற நியமனத்திற்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு கவர்னரின் உத்தரவின்பேரில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.