| ADDED : மே 30, 2024 04:39 AM
வில்லியனுார்: கோட்டைமேடு பகுதியில் அரசு இடத்தில் அத்துமீறி கட்டிடம் கட்டிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வில்லியனுார் வருவாய் கிராமம், கோட்டைமேடு பகுதியில் அனந்தம்மாள் சத்திரத்திற்கு சொந்தமான 5 ஏக்கர் இடம் தற்போது புதுச்சேரி அரசு விற்பனை குழு கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த இடத்தில் உழவர் சந்தை அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இங்கு செக்யூரிட்டியாக குணசேகரன் பணியாற்றி வருகிறார்.இந்த இடத்தில் வில்லியனுாரை சேர்ந்த ரவிக்குமார் மற்றும் ராமசாமி ஆகியோர் அத்துமீறி 900 சதுர அடி இடத்தை ஆக்கிரமித்து கட்டுமான பணி மேற்கொண்டு வருகின்றனர். தட்டிக்கேட்ட செக்யூரிட்டி குணசேகரனை மிரட்டி உள்ளனர். அவர், மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், விற்பனை குழு பொறியாளர் காளிதாஸ், கொடுத்த புகாரின் பேரில், அரசுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி கட்டடம் கட்டிய ரவிக்குமார், ராமசாமி ஆகியோர் மீது வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.