சிறுதானியம், பயிறு வகைகளில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண்துறை மூலம் ஆத்மா திட்டத்தின் கீழ் கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகத்தில் சிறுதானியங்கள் மற்றும் பயறுவகைகளில் மதிப்புக்கூட்டுதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண் அலுவலர் தினகரன், சிறுதானியங்களின் மகத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். வேளாண் அலுவலர் புவனேஸ்வரி மண்வளத்தின் முக்கியத்துவம் குறித்தும், திறன்வளர்ப்பு பயிற்றுனர் ரெஹ்மத்துன்னிசா சிறுதானிய புட்டு, சிறுதானிய சத்து மாவு, கருப்பு உளுந்து கஞ்சி, குப்பை மேனி சோப், காஸ்டிக் சோப் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர். சிறுதானிய கஞ்சி மிக்ஸ் குறித்து இந்துமதியும், பயிறு வகைகளில் மதிப்பு கூட்டுதல் குறித்து பாக்கியவதியும் செயல்முறை விளக்கம் அளித்தனர். முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு சிறுதானியங்கள் மற்றும் பயிறு வகைகளில் மதிப்புக் கூட்டுதல் குறித்த பயிற்சி கையேடு, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகள் வழங்கப்பட்டன. ஆத்மா தொழில்நுட்ப மேலாளர் சிரஞ்சீவி நன்றி கூறினார்.