உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை

2 பெண்களிடம் 13 சவரன் நகை பறிப்பு புதுச்சேரியில் மர்ம நபர்கள் கைவரிசை

புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து இரு பெண்களிடம் 13 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரியில் கடந்த வாரம் கோரிமேடு எல்லைக்கு உட்பட்ட கவிக்குயில் நகரில் 2 இடங்களில் வழிப்பறி நடந்தது. ரெட்டியார்பாளையம் மற்றும் கதிர்காமத்தில் இரு டாக்டர் வீடுகளை உடைத்து திருட்டு சம்பவம் நடந்தது.இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று முன்தினம் மாலை பைக்கில் வந்த 2 வாலிபர்கள், அனிதா நகர், வேல்ராம்பட்டு பகுதியில் அடுத்தடுத்து 4 பெண்களிடம் செயின் பறிக்க முயன்றனர். அவர்களின் அலறல் சத்தம் காரணமாக செயின் பறிப்பு சம்பவங்கள் தோல்வியில் முடிந்தன.இதனிடையே புதிய பைபாஸ் சாலை வழியாக சென்ற மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, கோவிலுக்கு சென்று திரும்பிய, ரெட்டியார்பாளையம் வயல்வெளி நகரைச் சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள், 74; அணிந்திருந்த 7 சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.அங்கிருந்து சென்ற செயின் பறிப்பு ஆசாமிகள், கோரிமேடு ராதாகிருஷ்ணன் நகர், ஜீவானந்தம் வீதியில் நடந்து சென்ற செல்வகுமார் மனைவி உமாவதி, 52; என்ற பெண்ணின் கழுத்தில் இருந்த 6.5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் மற்றும் கோரிமேடு போலீசார் தனித் தனியாக செயின்பறிப்பு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ